Gaza Ariel Schalit
உலகம்

பாதுகாப்பான இடத்துக்குச் சென்ற பாலஸ்தீனர்களை சுட்டுக் கொன்ற இஸ்ரேல்.. உறுதி செய்த சர்வதேச அமைப்பு..!

webteam

வடக்கு காஸா பகுதியிலிருந்து பாலஸ்தீன மக்கள் வெளியேற வேண்டும் என கடந்த 13 ஆம் தேதி பகிரங்கமாகவே அறிவித்தது இஸ்ரேல் அரசு. அதே சமயம், இஸ்ரேல் விடுத்த காலக்கெடுவுக்குள் அங்கிருந்த எல்லா மக்களையும் வெளியேற்றுவது இயலாத காரியம் என ஐக்கிய நாடுகள் சபை பலமுறை அறிவித்துவிட்டது.

கர்ப்பிணிகள், குழந்தைகள், மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகள், இஸ்ரேல் குண்டுகளால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் என எல்லோரையும் வெளியேற்றுவது கடினம் என பல சர்வதேச அமைப்புகள் அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

பற்றி எரியும் காஸா

இந்நிலையில் அப்படி வெளியேறி பாதுகாப்பான இடம் நோக்கி நகர்ந்த மக்களை இஸ்ரேல் அரசு தாக்கியிருப்பதாக உறுதி செய்திருக்கிறது சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி. வடக்கு காஸாவில் இருந்து வெளியேற சலாஹ்-அல் தீன் வீதி பாதுகாப்பானது என அறிவித்திருந்தது இஸ்ரேல் அரசு.

முப்பதுக்கும் மேற்பட்ட மக்களை ஏற்றிச்சென்ற வாகனம், பெண்கள், குழந்தைகள் சென்ற எட்டு கார்கள் என அந்த வீதியில் சென்ற பாலஸ்தீன மக்களை குண்டுகளை வீசி தாக்கியிருக்கிறது இஸ்ரேல். மக்களை தூக்கிச் செல்ல வந்த ஆம்புலன்ஸையும் தாக்கியிருக்கிறது. இந்தத் தாக்குதலில் 70க்கும் குறையாமல் மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இஸ்ரேல் - காஸா போர்

இதனாலேயே இருக்கும் இடத்திலேயே இருந்துவிடலாம் என நிறைய காஸா மக்கள் கருதுகிறார்களாம். எந்த இடமும் பாதுகாப்பில்லை என்பதே காஸாவில் இருக்கும் யதார்த்தமான சூழல். பாதுகாப்பான இடம் நோக்கி நகருங்கள் என அறிவித்துவிட்டு, அந்த பாதுகாப்பான வீதியிலேயே குண்டுகளை வீசுவது மன்னிக்க முடியாத குற்றம் என பல்வேறு அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன.

11 லட்சம் பாலஸ்தீனியர்களை வடக்கு காஸாவிலிருந்து வெளியேற சொல்லிவிட்டு, அந்த வழியில் குண்டுகளை இஸ்ரேல் வீசியிருக்கிறது என அல்ஜசீரா செய்தி ஊடகமும் உறுதி செய்திருக்கிறது.