ஈராக்  எக்ஸ் தளம்
உலகம்

9 வயது சிறுமிக்கும் திருமணம் செய்யலாம்.. சர்ச்சைக்குரிய மசோதாவை தாக்கல் செய்த ஈராக்!

Prakash J

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்று ஈராக். இந்த நாட்டில் உள்ள மதத் தலைவர்கள், தற்போதைய சட்டத்தை மீறி, குழந்தைத் திருமணங்கள் உட்பட, ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பதிவு செய்யப்படாத திருமணங்களை நடத்துவதாக சன்பார் அமைப்பு இந்த ஆண்டின் தொடக்கத்தில் எச்சரித்திருந்தது. குழந்தை திருமணம் என்பது ஈராக்கில் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. UNICEF இன் கூற்றுப்படி, 20 - 24 வயதுடைய பெண்களில் 28 சதவீதம் பேர் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்துகொள்வதாகவும், கூடுதலாக, இவர்களில் 7 சதவீதம் பேர் 15 வயதுக்கு முன்பே திருமணம் செய்துகொள்வதாகவும் அது தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்தான், பெண் குழந்தைகளின் திருமண வயதை 9 ஆகவும், ஆண் குழந்தைகளின் திருமண வயதை 15 ஆகவும் குறைக்கக்கூடிய சர்ச்சைக்குரிய மசோதா ஈராக் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது ஈராக்கில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18ஆக இருக்கும் நிலையில், அதை 9ஆகக் குறைக்க அந்நாட்டுச் சட்டத்துறை அமைச்சகம் இந்த மசோதாவை முன்மொழிந்துள்ளது. குடும்ப விவகாரங்களில் மதப் போதகர்கள் அல்லது நீதித்துறை என இரு தரப்பில் யார் முடிவெடுக்கலாம் என்பது குறித்து குடிமக்களே தேர்வு செய்யவும் இந்த மசோதா அனுமதிக்கும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: உடலுறவுக்கு கட்டணம் வசூலித்த மனைவி.. விவாகரத்து கோரிய கணவர்.. நிராகரித்த உயர்நீதிமன்றம்!

அதேநேரம், மதப் போதகர்களுக்கு இதுபோல அதிகாரத்தைக் கொடுப்பது வாரிசு உரிமை, விவாகரத்து மற்றும் குழந்தைப் பாதுகாப்பு விஷயங்களில் பெண்களின் உரிமைகளை பறிக்கும் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. ஆனால், இளம் பெண்கள் ஒழுக்கமற்ற உறவுகளில் செல்வதைத் தடுக்கவே இந்தச் சட்டம் முன்மொழியப்பட்டுள்ளதாக ஈராக் அரசு தெரிவித்துள்ளது.

என்றாலும், இந்த சர்ச்சைக்குரிய மசோதா நிறைவேற்றப்பட்டால் குழந்தைத் திருமணம் மற்றும் பெண்கள் மீதான சுரண்டலை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதன் காரணமாகவே, மனித உரிமை அமைப்புகள், பெண்கள் உரிமைக் குழுக்கள் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்துள்ளனர். இது இளம் பெண்களின் கல்வி, உடல்நிலை மற்றும் நல்வாழ்வைக் கடுமையாகப் பாதிக்கும் என்று அவர்கள் மேலும் எச்சரித்துள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் இந்த மசோதா முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், கடும் எதிர்ப்பு கிளம்பியதால் இந்த சட்ட மசோதா திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது. இந்தச் சூழலில், தற்போது மீண்டும் அந்தச் சட்ட மசோதாவை முன்மொழிந்துள்ளனர். இந்த முறை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ள ஷியாக்களின் ஆதரவு இருப்பதால் இது சட்டமாக நிறைவேறும் பட்சத்தில், அது இளம்பெண்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: எதிராளியை விரட்ட செஸ் போர்டில் விஷம் தெளிப்பு.. காட்டிக்கொடுத்த சிசிடிவி! சிக்கலில் வீராங்கனை #Video