உலகம்

ஈராக்: கொரோனா வார்டில் ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து 50 பேர் உடல்கருகி பலி

Veeramani

ஈராக்கில் மருத்துவமனை கொரோனா வார்டில் ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர் உடல்கருகி உயிரிழந்தனர்.

ஈராக்கில் நசிர்யா என்ற நகரில் இயங்கி வரும் அல் உசேன் டீச்சிங் மருத்துவமனையில் சில மாதங்களுக்கு முன் 70 படுக்கைகளுடன், புதிய கொரோனா வார்டு ஏற்படுத்தப்பட்டிருந்தது. அங்கு கொரோனா பாதிக்கப்பட்ட 63 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். அந்த வார்டில் எதிர்பாராதவிதமாக ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து தீப்பற்றியது.

இதை எதிர்பாராத நோயாளிகளும் மருத்துவ ஊழியர்களும் செய்வதறியாமல் அங்கும் இங்கும் ஓடி தப்பிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் வார்டு முழுவதும் நெருப்பு பரவியது. இதில் 50 நோயாளிகள் உடல் கருகி உயிரிழந்தனர். நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் சிலர் படுகாயமுற்று உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில், கடந்த ஏப்ரல் மாதம் ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் நேரிட்ட தீ விபத்தில், 82 பேர் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.