உலகம்

சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் கணக்கு - மத்திய அரசு கைக்கு வந்த பட்டியல் 

webteam

சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் விவரம் தொடர்பான பட்டியல் இந்தியாவிற்கு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்திய அரசு வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்பு பணத்தை மீட்க முயற்சிகளை எடுத்து வருகிறது. இது தொடர்பாக இந்திய அரசு Automatic Exchange Of Information என்ற ஒப்பந்தத்தை சுவிட்சர்லாந்து நாட்டுடன் செய்துள்ளது. இதன்படி அந்நாட்டு வங்கியிலுள்ள இந்தியர்களின் கணக்குகள் தொடர்பான விவரங்கள் இந்திய அரசிற்கு அளிக்கப்படும். 

இந்நிலையில் தற்போது சுவிஸ் வங்கியிலிருந்து கணக்கு விவரங்கள் இந்தியா அரசிடம் தரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சுவிட்சர்லாந்தின் ஃபெடரல் வரி நிர்வாகத்தின் செய்தி தொடர்பாளர் பிடிஐ நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில்,“சுவிட்சர்லாந்தின் ஃபெடரல் வரி நிர்வாகம் 75 நாடுகளுக்கு வங்கி கணக்குகளின் விவரங்களை அளித்துள்ளது. இந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது. இவை அனைத்தும் சுவிட்சர்லாந்து நாடு போட்டுள்ள Automatic Exchange Of Information ஒப்பந்தத்தின் மூலம் அளிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 

இந்த ஒப்பந்தத்தின் மூலம் முதன்முறையாக சுவிட்சர்லாந்து அரசு வங்கி கணக்குகளின் தகவல்களை பகிர்ந்துள்ளது. இந்தத் தகவலில் தற்போது சுவிஸ் வங்கியில் செயல்பட்டு வரும் கணக்குகளின் விவரம் மற்றும் கடந்த 2018ஆம் ஆண்டு முடிக்கப்பட்ட கணக்குகளின் விவரங்களும் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.