உலகம்

பெண்களுக்கு ஆபத்து வெளியே இல்லை, வீட்டில்தான் !

webteam

கடந்த வருடத்தில் கொலை செய்யப்பட்ட பெண்களில் 50%க்கும் அதிகமானோர் தங்களது கணவனாலோ அல்லது குடும்ப உறுப்பினர்களாலோ தான் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்ற அதிர்ச்சியான புள்ளி விவரத்தை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது

பெண்களுக்கு எதிரான வன்முறையை அகற்றும் தினத்தை ஐக்கிய நாடுகள் சபை கடைபிடித்தது. இந்த தினத்தை முன்னிட்டு பெண்களின் பாதுகாப்பு குறித்தும், அவர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்தும் பல்வேறு புள்ளிவிவரங்கள் எடுக்கப்பட்டன. அதன்படி உலக அளவில் கடந்த வருடத்தில் கொலை செய்யப்பட்ட பெண்கள் குறித்த புள்ளிவிவரம் எடுக்கப்பட்டது. 

உலக அளவில் 87,000 பெண்களின் கொலைக்குற்றங்கள் கணக்கில் எடுக்கப்பட்டன. அதில் 50 ஆயிரம் பெண்கள் அதாவது 58% பெண்கள் தங்களது கணவனாலோ அல்லது குடும்ப உறுப்பினர்களாலோ தான் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது. அதேபோல் 30,000 பேர் அதாவது 34% பெண்கள் உறவினர் அல்லாது நெருங்கிய பழக்கம் உடைய யாரோ ஒருவரால் தான் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் தங்களுக்கு அறிமுகமான யாரோ ஒருவரால் 6 பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள் என்ற அதிர்ச்சி புள்ளிவிவரத்தையும் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது.

புள்ளிவிவரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையில் போதை மற்றும் குற்றப்பிரிவின் நிர்வாக இயக்குநர் யூரி ஃபெடாடோவ், பாலின சமத்துவமின்மைக்கு பெண்கள் அதிக விலையை கொடுத்து வருகிறார்கள். வீடு தான் பெண்களுக்கு அபாயகரமான இடமாக உள்ளது.  கொலை செய்யப்படுபவர்களில் 80% பெண்கள், அவர்களுக்கு தெரிந்த ஆண்களிலாலே கொலை செய்யப்படுகிறார்கள் என்று தெரிவித்தார்.

குற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களும், தண்டனைகளும் இயற்றப்பட்டால் தான் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறையும் என்றும், இது குறித்து ஆண்களிடத்தில் சரியான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்றும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது