Sealand Twitter
உலகம்

சீலேண்ட்... உலகின் மிகச் சிறிய நாடு இதுதான்! இது உருவானது எப்படி தெரியுமா? சுவாரஸ்ய வரலாறு!

Justindurai S

சீலேண்ட்... உலகின் மிகச்சிறிய நாடு இது. இங்கிலாந்தின் சஃபோல்க் கடற்கரையிலிருந்து 6.5 மைல் தொலைவில் வட கடலில் அமைந்துள்ள மிகச்சிறிய தேசமான இது, ஒருகாலத்தில் ராணுவ கடற்படை தளமாக இருந்த இடம்.

1942ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற சமயத்தில் இங்கிலாந்து நாடு தனது கடற்கரையில் சிறிய தளங்களை அமைத்தது. அவை மற்ற நாட்டு விமானங்கள் பறப்பதை தடுக்கவும், பிரிட்டிஷ் கப்பல் தடங்களில் ஜெர்மன் அரசு கடற்படை சுரங்கம் அமைப்பதை தடுக்கவும் பக்கபலமாக இருந்தன. சிறிது காலத்திற்குப் பின் இந்த தளங்கள் ஆங்கிலேயர்களால் கைவிடப்பட்டன.

Sealand

1967ம் ஆண்டு ராய் பேட்ஸ் என்பவர் இந்த கடல் தளங்களில் ஒன்றை கைப்பற்றி அதை சீலேண்ட் என்ற பெயரில் சொந்த நாடாக அறிவித்தார். அன்று முதல் பேட்ஸின் குடும்பம் அங்கு அரச குடும்பமாக உள்ளது. ஒரு சிறிய கட்டிடம் மற்றும் அதன் மேல்பகுதியில் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு போதுமான தளத்துடன் உள்ள சீலேண்டிற்கு தனி பாஸ்போர்ட், நாணயம், கொடி போன்றவை உள்ளன.

1978ம் ஆண்டு டச்சு கமாண்டோக்கள் சீலேண்டை கைப்பற்ற முயன்றது. ஆனால் அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது. 1990இல் சீலாண்ட்டில் பிரிட்டிஷ் காவல்துறையினர் சோதனை செய்தனர். சோதனைக்குப் பின் ராய் பேட்ஸின் மகன் மைக்கேலை கைது செய்தனர்.

அதன் பின்னர் தனி நாடு அந்தஸ்து கேட்டு பலமுறை பேட்ஸின் குடும்பம் பிரிட்டிஷ் நீதிமன்றத்தை அணுகியது. ஆனாலும் சீலேண்ட் உலக அளவில் அங்கீகரிக்கப்படவில்லை. இவ்வாறு சிக்கலான வரலாறை கொண்டிருந்தாலும் சீலேண்ட் ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாக உள்ளது. சுற்றுலாப்பயணிகள் அங்கு படகு மூலம் பயணம் செய்து அதன் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

Sealand

சீலேண்ட் ஆனது, கடற்கொள்ளையர்கள் மற்றும் ஹேக்கர்களின் புகலிடமாக இருப்பதாக புகார்கள் எழுந்து வருகிறது. 2000ஆம் ஆண்டில் அரசாங்க வலைத்தளங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஹேக்கர்கள் குழு சீலேண்ட்டை பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. 2012இல் கடற்கொள்ளையர்கள் குழு ஒன்று கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு சீலேண்டை ஒரு தளமாக பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

ஆனால் சீலேண்ட் அரசு இந்த குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்தது. சீலேண்ட் தொலைதூரத்தில் ஒதுங்குபுறமாக அமைந்திருப்பது மற்றும் அரசாங்க விதிமுறைகள் அங்கு இல்லாதது ஆகியவற்றால் குற்றவாளிகளுக்கு அந்நாடு புகலிடமாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றன.

Sealand

இக்காரணங்களால் சீலேண்டின் எதிர்காலம் நிச்சயமற்றதாக இருக்கிறது. சீலேண்ட் எப்போது வேண்டுமாலும் ஒரு இறையாண்மை கொண்ட நாடாக அங்கீகரிக்கப்படலாம் அல்லது அழிக்கப்படலாம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.