உலகம்

கிரீன்லாந்தில் ஒரே நாளில் உருகிய 1100 கோடி டன் பனிப்பாறை!

webteam

கிரீன்லாந்தில் ஒரே நாளில் சுமார் ஆயிரத்து 100 கோடி டன் பனி உருகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கிரீன்லாந்து நாட்டில், கோடைக்காலத்தின்போது வழக்கமாக 50 சதவீத பனி உருகுவது வழக்கம். தொடர்ந்து வரும் குளிர்காலத்தில் மீண்டும் ‌பனி உறைந்து விடுவதுண்டு. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்பம் காரணமாக பனி உருகுவது அதிகரித்துள்ளது.

அதன்படி கிரீன்லாந்தில் 24 மணி நேரத்தில் ஆயிரத்து 100 கோடி டன் பனி உருகி கடல் நீர்மட்டத்தை அதிகரிக்க செய்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆவணப்படங்களைத் தயாரிக்கும் காஸ்பர் ஹார்லோவ் என்பவர் எடுத்த பனி உருகும் வீடியோக்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நாசா ''கிரீன்லாந்தின் பனிப்பாறைகள் ஒரு "பெரிய பனி உருகும் நிகழ்வுக்கு" ஆளாகியுள்ளன. பில்லியன் டன்களில் உருகும் நீர் அட்லாண்டிக் பெருங்கடலில் கலந்து கடலின் நீர்மட்டம் உயர்கிறது.

புளோரிடா மாநிலம் முழுவதையும் கிட்டத்தட்ட ஐந்து அங்குல நீரில் மூடுவதற்கு இந்த நீர் போதுமானது. அதிக வெப்பத்தின் காரணமாகவே இந்த முறை அதிக அளவிலான பனிக்கட்டிகள் உருகியுள்ளன. உலக வெப்பமயமாதல் போன்ற வானிலையை பாதிக்கும் காரணங்களால் எதிர்காலத்தில் இன்னும் மோசமான நிலைமையை சந்திக்க வாய்ப்புள்ளது'' என தெரிவித்துள்ளது