உலகம்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம்; 114 பேர் சுட்டுக்கொலை - உலக நாடுகள் கண்டனம்!

JustinDurai

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடக்கும் போராட்டங்களில் கண்மூடித் தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் குழந்தைகள் உள்பட 114 பேர் கொல்லப்பட்டிருப்பதாக ஏ.ஏ.பி.பி எனும் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்தது. இதுதொடர்பாக மியான்மர் அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்துவந்த நிலையில் அண்மையில் ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து, மியான்மர் ராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது. அடுத்த ஓராண்டுக்கு ராணுவம் அவசர நிலையை அறிவித்திருக்கிறது. 

இதனைத் தொடர்ந்து ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை அடக்க அந்நாட்டு ராணுவம் கடுமையான வன்முறையை பிரயோகித்து வருகிறது. 300-க்கும் மேற்பட்ட மியான்மர் நாட்டு குடிமக்களை ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது.

இந்தநிலையில் நேற்று யாங்கூன் உட்பட முக்கிய நகரங்களில் மக்கள் ராணுவத்திற்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தினர். போராட்டத்தை ஒடுக்குவதற்காக ராணுவமும் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் 114 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மியான்மரில் நடக்கும் ராணுவ தாக்குதலுக்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.