உலகம்

"தியாகங்களைச் செய்ய தயாராகுங்கள்..." - பிரான்ஸ் அதிபருக்கு வந்த பகிரங்க மிரட்டல்!

webteam

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு ஜெய்ஷ் -இ-முகமது அமைப்பு கொலை மிரட்டல் விடுத்தது சர்வதேச அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள கான்ஃப்ளான்ஸ் செயின்ட் ஹொனோரின் என்ற இடத்தில் அமைந்திருக்கும் பள்ளி ஒன்றில் பணியாற்றி வந்தவர் ஆசிரியர் சாமுவேல் பேட்டி. இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னால் முகமது நபியின் கேலி சித்திரங்களை தனது வகுப்பில் காட்டியதற்காக, தலைதுண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்தக்கொலைத் தொடர்பாக 17 வயது இளம்பெண் உட்பட மூன்று பேர் கைதுசெய்யப்பட்டனர். இந்த விவகாரம் பிரான்சில் மதப்பிரச்சனையாக வெடித்தது.

ஆசிரியருக்கு நடந்த அஞ்சலிப் பேரணியில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். பேரணியில் பேசிய மேக்ரான், "பிரான்சில் இஸ்லாமிய பயங்கரவாதம் ஒடுக்கப்படும். இனி ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிரான்ஸில் நிம்மதியாக தூங்க முடியாது" என ஆவேசமாகப் பேசினார். மேக்ரானின் இந்தப்பேச்சு உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சவூதி அரசர் என இஸ்லாமிய நாட்டுத்தலைவர்கள் மேக்ரானுக்கு எதிராக  போர்க்கொடி தூக்கினர். இதனையடுத்து பிரான்ஸில் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தெருவோரத்தில் நின்று கொண்டிருந்த இரண்டு இஸ்லாமிய பெண்ளை சிலர் கத்தியால் குத்தினர். சில இடங்களில் வன்முறை வெடித்தது. இதனால், அங்கு தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இதனிடையே, இந்த விவகாரத்தில் தற்போது ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு, அதிபர் இம்மானுவேல் மேக்ரானை குறிவைத்து மிரட்டல் விடுத்துள்ளது. ஜெய்ஷின் ஆன்லைன் இதழான அல்-கலாமில் கையொப்பமிடாத ஒரு கட்டுரையில், "இன்று இல்லையென்றால், நாளை, நாளை இல்லையென்றால், நாளை மறுநாள், அப்துல்லா செச்சேனி (பிரான்ஸ் ஆசிரியரைக் கொன்றவர்), மும்தாஜ் காத்ரி மற்றும் காசி காலித் ஆகியோர் இருப்பார்கள். நபியின் நினைவாக தியாகங்களைச் செய்ய மேக்ரானும், அவரைப் போன்றவர்களும் தயாராக இருக்க வேண்டும்" என்று பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது