கம்பேக்ட் எக்ஸ் தளம்
உலகம்

இனவாதத்திற்கு ஆதரவாக தீவிர வலதுசாரி கருத்துகளை எழுதிய 'Compact' இதழுக்குத் தடை! ஜெர்மனி அரசு அதிரடி

Prakash J

ஜெர்மனியில் தீவிர வலதுசாரி கொள்கையை பரப்பிவந்த பிரபல பத்திரிகைகளில் Compact-ம் ஒன்று. கடந்த 2010ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பத்திரிகை, மாதந்தோறும் 40 ஆயிரம் பிரதிகளை விற்பனை செய்துவந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜெர்மனி அரசியலமைப்புக்கு எதிராகவும் பொதுமக்கள் இடையே இனவாத வெறுப்பை தூண்டும் வகையில் அப்பத்திரிகை செயல்பட்டு வந்ததாகக் கூறி அந்நாட்டு உள்துறை அமைச்சகம் Compact பத்திரிகைக்கு தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக, கடந்த மே மாதம் வெளியான இப்பத்திரிகையில் ஜெர்மன் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான கட்டுரை எழுதப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அதனடிப்படையில் நாட்டில் உள்ள இந்நிறுவனத்தின் கிளைகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதன்பேரிலேயே இத்தகைய தடை நடவடிக்கையை அரசு எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க:திருமணமாகி 1 வருடம் ஆன நிலையில், கணவரை விவாகரத்து செய்தார் துபாய் இளவரசி.. இன்ஸ்டாவில் பதிவு!

இதுகுறித்து ஜெர்மனி உள்துறை அமைச்சர் நான்சி ஃபேசர், “இது வலதுசாரி தீவிரவாத கட்சியின் மையமாகச் செயல்படுகிறது. இந்த இதழ் யூதர்கள், புலம்பெயர்ந்த வரலாற்றைக் கொண்ட மக்கள் மற்றும் நமது நாடாளுமன்ற ஜனநாயகம் ஆகியவற்றுக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டுகிறது.

அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக வெறுப்பு மற்றும் வன்முறையின் சூழலைத் தூண்டுகிறது. நமது ஜனநாயக அரசை வெல்ல விரும்பும் அறிவார்ந்தவர்களுக்கு எதிராகவும் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்பதை இந்தத் தடை காட்டுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, கடந்த 2020ஆம் ஆண்டு வெறுக்கதக்கக் கருத்துகளுக்காக இந்நிறுவனத்தின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் தடை செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது எக்ஸ் தளப் பக்கமும் முடக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் தீவிர வலதுசாரி பத்திரிகை அந்நாட்டு அரசால் தடை செய்யப்பட்டிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

தீவிர வலதுசாரி AfD கடந்த மாதம் ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கான தேர்தல்களில் வலுவான வெற்றிகளைப் பெற்றிருந்தது. மேலும், கடந்த செப்டம்பரில் மூன்று கிழக்கு ஜெர்மனி மாநிலங்களில் தேர்தல்களில் முன்னணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ”காதல் என்றபெயரில் என் மகனை ஏமாற்றியுள்ளார்”-மருமகள் மீது வீரமரணமடைந்த கேப்டனின் தந்தை குற்றச்சாட்டு