இஸ்ரேல் - ஹமாஸ் தாக்குதல் Twitter
உலகம்

“எங்க போறதுன்னே தெரியல... இங்கயே முடியட்டும்...” கண்ணீருடன் காஸா மக்கள்..!

“நாங்கள் இறக்கப் போகிறோம் என்பது முடிவாகிவிட்டதால், வீட்டிலேயே இறந்து கொள்கிறோம். வடக்கோ தெற்கோ எங்கு சென்றாலும் கொல்லப்படத்தானே போகிறோம்”

karthi Kg

இஸ்ரேல் அரசு விதித்திருந்த 24 மணி நேர காலக்கெடு முடிவடைந்துவிட்டது. 24 மணி நேரத்தில் 11 லட்சம் மக்களை வடக்குப் பகுதியிலிருந்து வெளியேற சொன்னது இஸ்ரேல் அரசு. 24 மணி நேரத்திற்குப் பின்னர், அந்தப் பகுதிகளில் தரைவழித் தாக்குதல் நடத்துவதே இஸ்ரேல் அரசின் திட்டம். உயிரைக் காப்பாற்றிக் கொள்ள விரும்புபவர்கள் தெற்குப் பக்கம் சென்றுவிடுங்கள் என அறிவித்தார் இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோ காலண்ட்.

இஸ்ரேல் - ஹமாஸ் தாக்குதல்

இஸ்ரேல் அரசு விதித்திருந்த காலக்கெடுவுக்குள் பாதிக்கப்பட்ட மக்களை அந்த இடத்திலிருந்து வெளியேற்றுவது இயலாத காரியம் என ஐநா அறிவித்தது. ஐநா அதிகாரியான மார்ட்டின் கிரிஃப்த்திஸ் 'காஸாவில் இருக்கக்கூடிய மக்களின் கயிறு இறுகிக் கொண்டிருக்கிறது. மக்கள் அதிகம் வாழக்கூடிய போர்ப் பகுதியிலிருந்து எப்படி 11 லட்சம் மக்களை 24 மணி நேரத்தில் வெளியேற்ற முடியும்?' என வெளிப்படையாகவே அறிவித்தார்.

காஸாவில் வாழும் மன்சூர் சௌமன் அல் ஜஸீரா செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “நாங்கள் நம்பிக்கையற்று போய்விட்டோம். காஸாவைப் பற்றியும் இங்கிருக்கும் மக்களைப் பற்றியும் யாருக்கும் அக்கறையில்லை. நாங்கள் இறக்கப் போகிறோம் என்பது முடிவாகிவிட்டதால், வீட்டிலேயே இறந்து கொள்கிறோம். வடக்கோ தெற்கோ எங்கு சென்றாலும் கொல்லப்படத்தானே போகிறோம். எங்கள் உரிமைக்காக போராடியபடி, நெஞ்சை உயர்த்தி, எங்கள் நம்பிக்கையுடன் எங்கள் மண்ணிலேயே இறந்துவிடுகிறோம்” என பேட்டியளித்திருக்கிறார்.

Israel war

காஸாவில் வாழும் ஸ்காட்லாந்து செவிலியரான எலிசபெத் எல் நக்லா, இதுகுறித்து கூறுகையில், “இதுவே என் கடைசி வீடியோவாக இருக்கும். நாங்கள் இருக்கும் மருத்துவமனை நோக்கி பல்வேறு இடங்களிலிருந்து காஸா மக்கள் வருகிறார்கள். பத்து லட்சம் மக்கள் இங்கு இருக்கிறார்கள். உணவு தண்ணீர் என எதுவும் இல்லை. நாங்கள் செல்லும் இடமெல்லாம் குண்டுகள் விழுந்துகொண்டே இருக்கின்றன.

இந்த மருத்துவமனையில் இருக்கும் யாரையும் எங்களால் எங்கேயும் கூட்டிச் செல்ல முடியாது. மனிதம் எங்கே இருக்கிறது? உலகில் வாழும் மக்கள் எப்படி இதை பொறுத்துக் கொண்டு இருக்கிறார்கள்? கடவுள் துணை இருப்பார் என நம்புகிறேன்” என கண்ணீருடன் வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.