உலகம்

ரத்த மாற்று மூலம் கொரோனாவை வீழ்த்த முடியுமா ? விரைவில் சோதனை முயற்சி

jagadeesh

உலகளவில் கொரோனா வைரசை வீழ்த்த தீவிரமாக ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பிரான்ஸில் ரத்த மாற்று முறையில் கொரோனா தாக்குதலை முறியடிக்க முடியுமா என்ற கோணத்தில் ஆய்வு தொடங்க உள்ளது. இதன்படி ஏற்கெனவே கொரோனா தாக்கி குணமடைந்தவர்களின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா அணுக்கள் கொரோனா தாக்கியவர்களின் ரத்தத்தில் செலுத்தப்படும்.

குணமடைந்தவரின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் கொரோனாவை எதிர்க்கும் திறன் கொண்ட எதிர் உயிரிகள் வளர்ந்திருக்கும். அந்த எதிர் உயிரிகள் செலுத்தப்பட்டவர் உடலுக்குள் சென்று அங்குள்ள கொரோனா வைரஸ்களை தாக்கி அழிக்கும் என நம்பப்படுகிறது. இந்த கருத்தாக்கத்தை நடைமுறையில் செயல்படுத்தி வெற்றி பெற முடியுமா என அறிய நிபுணர்கள் முனைந்துள்ளனர்.

பாரிஸ் நகரில் உள்ள 60 கொரோனா நோயாளிகளை ரத்த மாற்று முறையில் குணப்படுத்தும் சோதனை முயற்சி வருகிற செவ்வாய்க்கிழமை தொடங்க உள்ளது. அதன் முடிவுகள் தெரிய 2 முதல் 3 வாரங்கள் ஆகும் எனத் தெரிகிறது. இது போன்ற சோதனைகள் ஏற்கனவே சீனாவிலும் அமெரிக்காவிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் கடந்த காலங்களில் உலகை மிரட்டிய எபோலா, சார்ஸ் ஆகிய வைரஸ் தாக்குதல்களின் போதும் இந்த ரத்த மாற்று முறை சிகிச்சை நல்ல பலன் தந்தது. இந்த சிகிச்சை கொரோனாவுக்கும் பலன் தரும் பட்சத்தில் அது சர்வதேச அளவில் கொரோனாவை முறியடிப்பதில் மிகப்பெரிய திருப்புமுனையை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.