ஒசாமா பின்லேடன், உமர் பின்லேடன் எக்ஸ் தளம்
உலகம்

ஒசாமா பின்லேடன் மகன் | நாட்டைவிட்டு வெளியேற பிரான்ஸ் அரசு உத்தரவு!

ஒசாமா பின்லேடனின் மகன் உமர் பின்லேடனை நாட்டைவிட்டு வெளியேறுமாறு பிரானஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.

Prakash J

அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவராக அறியப்பட்ட ஒசாமா பின்லேடன், கடந்த 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி அமெரிக்காவின் வர்த்தக மையம் மற்றும் பென்டகனைத் தாக்கியதன் மூலம் கவனம் பெற்றார். இதையடுத்து அன்றுமுதல் அவர், அமெரிக்காவின் மிகப்பெரிய பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து அவர் தலைமறைவானார். என்றாலும், அவர் குறித்த இருப்பிடத்தைத் தேடி வந்த அமெரிக்கப் படையினர், இறுதியில் கடந்த 2011, மே 2ஆம் தேதி அவர் பாகிஸ்தானில் தங்கியிருந்தபோது சுட்டுக் கொன்றனர். இந்த நிலையில், அவருடைய மகன் உமர் பின்லேடனை நாட்டைவிட்டு வெளியேறுமாறு பிரானஸ் அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.

மறைந்த ஒசாமா பின்லேடனின் பல மகன்களில் உமர் பின்லேடனும் ஒருவர். சவூதியில் பிறந்த உமர் பின்லேடன், 19 வயதிலேயே தன் தந்தையைவிட்டுப் பிரிந்து ஆப்கானிஸ்தான், சூடான் நாடுகளில் தஞ்சமடைந்து வாழ்ந்துவந்த நிலையில் அந்நாட்டு அரசால் வெளியேற்றப்பட்டார். இதையடுத்து கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் வடக்கு பிரான்ஸில் உள்ள நார்மண்ட் என்ற இடத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில், உமர் பின்லேடனை நாட்டைவிட்டு வெளியேறுமாறு பிரானஸ் அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க; “வினேஷ் போகத் எங்கு சென்றாலும்..” - தேர்தலில் வெற்றிபெற்றதை கடுமையாக விமர்சித்த பிரிஜ் பூஷன் சிங்!

கடந்த 2023இல் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் வகையிலான சில கருத்துகளை உமர் பின்லேடன் பதிவிட்டிருந்த நிலையில், அதற்காகவே இப்போது அவரை நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் புருனே ரீடெய்லியூ தெரிவித்துள்ளார். தேசியப் பாதுகாப்பு நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதை நீதிமன்றங்களும் உறுதி செய்துள்ளதாகவும் புருனே கூறினார்.

இதுதொடர்பாக அவர், “உமர் பின்லேடன், சமூக வலைதளங்கள் வாயிலாக மறைமுகமாக பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவு அளிப்பதாக தெரியவருகிறது. ஏற்கெனவே ஜிகாதியின் மகனாக இருப்பதால், நாட்டிற்கு ஏற்படும் பின்விளைவுகளை கருத்தில்கொண்டு அவர் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிடுகிறோம். தேசிய பாதுகாப்பு நலன்களுக்காக பிரான்ஸ் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இதனை நீதிமன்றங்களும் உறுதி செய்துள்ளன. எனவே, உமர் பின்லேடன் எந்த விளக்கமும் தர வேண்டியதில்லை” என தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு ஏற்படும் பின்விளைவுகளை கருத்தில்கொண்டு அவர் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும். தேசிய பாதுகாப்பு நலன்களுக்காக பிரான்ஸ் அரசு இந்த முடிவு எடுத்துள்ளது.
புருனே ரீடெய்லியூ

உமர் பின்லேடன் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஜேன் பெலிக்ஸ்-பிரவுன் என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இவர், உமர் பின்லேடனைவிட 20 வயது மூத்தவர். மேலும், உமரை திருமணம் செய்யும்போது ஜேன் பெலிக்ஸுக்கு 5 பேரக்குழந்தைகளும் இருந்தது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்குப் பிறகு ஜேன் பெலிக்ஸ் தனது பெயரை இஸ்லாமிய முறையில் ஜைனா முகமது என்று மாற்றிக் கொண்டார். திருமணத்திற்குப் பின்னர் உமர் பின்லேடன் இங்கிலாந்தில் வசிக்க முயன்றார். இருப்பினும் பிரிட்டன் அரசு அதற்கு அனுமதி தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க; ஹரியானா: காங். தோல்வி.. இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் ஜிலேபி.. ராகுலை விமர்சிக்கும் பாஜக.. ஏன் தெரியுமா?