ஒலிம்பிக் நகரம் எக்ஸ் தளம்
உலகம்

வீடற்றவர்கள் விரட்டியடிப்பு | வன்முறையில் ஒலிம்பிக் நகரம்; ரசிகர்கள் தவிப்பு! பாரீஸில் நடப்பது என்ன?

Prakash J

உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவாக கருதப்படும் ஒலிம்பிக் போட்டி, பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இன்று (ஜூலை 26) கோலாகலமாகத் தொடங்குகிறது. இந்த போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்தியா சார்பில், 117 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 13 பேரும் இடம் பிடித்துள்ளனர்.

இந்த நிலையில், ஒலிம்பிக் போட்டிக்காக பாரீஸ் நகரமே களைகட்டியுள்ள நிலையில், அந்நகரத்தில் வீடின்றி இருந்த மக்கள் ஆயுதம் தாங்கிய போலீசாரால் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டிருப்பது பேசுபொருளாகி இருக்கிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கடந்த மூன்று மாத காலமாக, பாரீஸ் நகரில் தங்கியிருந்த வீடற்றவர்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வந்திருக்கின்றன. கடைசி கட்டமாக நேற்று மிச்சமிருந்தவர்களையும் ஆயுதம் ஏந்திய பிரெஞ்சு போலீஸ் அப்புறப்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க; “இந்துக்கள் காணாமல் போவார்கள்” - மேற்கு வங்க பகுதிகளை யூனியன் பிரதேசமாக்க பாஜக எம்பி வலியுறுத்தல்!

ஒலிம்பிக் போட்டிக்கு செலவு செய்யும் தொகையில் மிகச்சிறிய தொகையை வீடற்றவர்களுக்கு செலவழித்திருந்தால் அவர்கள் நிரந்தரமாக தங்குவதற்கு வீடு கிடைத்திருக்கும். ஆனால், அதை செய்யாமல் சுற்றுலாப் பயணிகளுக்காகவும், ஒலிம்பிக் போட்டிக்காகவும் இவர்களை நகரத்தை விட்டு துரத்துவது ஏற்கத்தக்கதல்ல” என்று சமூக செயற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

ஆனால், இதை பாரிஸைச் சுற்றியுள்ள Žle-de-France இன் பிராந்திய அரசாங்கத்தின் தலைமை அதிகாரியான Christophe Noël Du Payrat மறுத்துள்ளார். “பல ஆண்டுகளாக நகரத்தில் வசித்துவந்த புலம்பெயர்ந்தவர்களை அரசாங்கம் வேறு இடத்திற்கு மாற்றியுள்ளது. அவர்களை, அரசு தொடர்ந்து கவனித்து வருகிறது. இந்த மக்களுக்கு இடங்களை வழங்குவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: அமெரிக்க அதிபர் தேர்தல் | களத்தில் நிற்கும் கமலா ஹாரீஸ்.. மவுனம் கலைத்த பராக் ஒபாமா!

இன்னொரு புறம், பிரான்ஸில் ஒலிம்பிக் போட்டியை நடத்தக்கூடாது என அந்நாட்டில் சில கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். ஒலிம்பிக் போட்டியை சீர்குலைக்கும் வகையிலான பல சதிச்செயல்களில் அவர்கள் ஈடுபட்டு வந்தனர். ஆனால், உளவுப்படையினரின் உதவியுடனும், ராணுவம், போலீசாரின் கண்காணிப்புடனும் அந்த சதிச்செயல் முறியடிக்கப்பட்டன.

இன்று ஒலிம்பிக் துவக்க விழா கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில், நேற்று இரவு பாரீஸையும், மற்ற நகரங்களையும் இணைக்கும் ரயில் தண்டவாளங்களை கிளர்ச்சியாளர்கள் சேதப்படுத்தினர். அந்த ரயில் பாதைகளில் பல இடங்களில் அவர்கள் தீ வைத்தனர்; சில ரயில்கள் மீதும் தாக்குதல் நடத்தினர்.

இதனால் நேற்று இரவு முதல் நூற்றுக்கணக்கான ரயில்கள் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டிருப்பதுடன், இன்னும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் ஒலிம்பிக் போட்டியை பார்க்க பல நாடுகளில் வந்திருந்த பல லட்சம் பார்வையாளர்கள், பாரீஸுக்குச் செல்ல முடியாமல் நகரத்துக்கு வெளியே தவிக்கின்றனர். சேதமடைந்த தண்டவாளங்களைச் சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் அங்கு நடைபெற்று வருகின்றன.

இதையும் படிக்க: 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்த இருமல்.. புற்றுநோய் என பயந்த சீனர்... காத்திருந்த ட்விஸ்ட்!