உலகம்

பிரான்ஸில் காவல் அதிகாரிகள் மீது கத்திக்குத்து தாக்குதல் - 4 பேர் உயிரிழப்பு

webteam

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நான்கு காவலர்களை குத்தி கொன்ற நபர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள காவல்துறையின் தலைமையகத்தில் உயர் அதிகாரிகள் மீது சக ஊழியர் ஒருவர் கத்தியால் குத்தி தாக்கியுள்ளார். மதிய உணவு நேரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கத்தி குத்து தாக்குதல் சம்பவத்தை பார்த்ததும் அங்குள்ளவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்தத் தாக்குதலில் நான்கு காவலர்கள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, காவல்துறை தலைமையகத்தை சுற்றிவளைத்த போலீசார், கத்திக் குத்து தாக்குதலில் ஈடுபட்டவரை சுட்டு கொன்றனர். 

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் அதே அலுவலகத்தில் ஐடி துறையில் பணி புரிந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு வயது 45. 20 வருடங்களாக அந்த காவல்துறை தலைமையகத்தில் பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த சம்பவம் குறித்து பிரான்ஸ் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “கத்திக் குத்தில் ஈடுபட்ட நபரை எனக்கு நன்றாக தெரியும். அவர் ஐடி துறையில் வேலை பார்த்தார். நீண்ட காலமாகவே தன்னுடைய உயர் அதிகாரியுடன் அவருக்கு பிரச்னை இருந்து வந்தது. முதலில் அந்த உயரதிகாரியை கத்தியால் குத்தியுள்ளார். சக அதிகாரிகள் அதனை தடுக்க முற்படவே மற்றவர்களையும் அவர் குத்தினார்” என்றார்.