உலகம்

நடுவானில் பணிப்பெண்களுடன் சண்டையிட்ட பெண்... தரை இறக்கப்பட்ட விமானம்

webteam

இங்கிலாந்தின் மான்செஸ்டரில் இருந்து துருக்கி நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தில் பெண் பயணி ஒருவர் பணிப்பெண்களுடன் மோசமான சண்டையில் ஈடுபட்டதால் விமானம் தரையிறக்கப்பட்டது.

இங்கிலாந்தின் மான்செஸ்டரில் இருந்து துருக்கி நோக்கி  ஜெட்-2 எனும் விமானம் சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் சில குழந்தைகளின் அழுகைச் சத்தம் தனக்கு தொந்தரவாக இருப்பதாக பெண் பயணி ஒருவர் விமான பணிப்பெண்களிடம் புகார் அளித்துள்ளார். புகாரை அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கும்போது திடீரென பணிப்பெண்களை நோக்கி கத்த ஆரம்பித்தார். அவரை அமைதிப்படுத்த பணிப்பெண்கள் முயன்றனர். ஆனால் மேலும் ஆக்ரோஷமாக கத்த ஆரம்பித்தார் அந்த பெண். ஒருகட்டத்தில் அவர் சக பயணிகளின் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.

அந்த பெண்ணை அமைதிப்படுத்த எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததால், விமானக் குழுவினர் விமானத்தை வியன்னாவுக்குத் திருப்பினர். அந்தப் பெண் விமானத்தில் "சுமார் ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள்" இடையூறு செய்ததாக பயணி ஒருவர் கூறியுள்ளார். வியன்னாவில் தரையிறங்கிய பின்னர் ஆயுதமேந்திய காவலர்கள் அந்த பெண்ணை விமானத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்றனர். விமானத்தில் இருந்து அந்த பெண் வெளியே வரும்போது பல பயணிகள் ஆரவாரம் செய்தனர். பின்னர் விமானம் வியன்னாவில் இருந்து துருக்கியின் அண்டலியாவுக்கு புறப்பட்டது.