உலகம்

சூடான் தொழிற்சாலையில் தீ விபத்து: 18 இந்தியர்கள் உயிரிழப்பு

Rasus

சூடானில் செராமிக் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 24 பேர் உயிரிழந்தனர். இதில் 18 பேர் இந்தியர்கள்.

சூடான் தலைநகர் கார்டோமில் உள்ள செராமிக் தொழிற்சாலையில் வழக்கம்போல தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த தொழிற்சாலைக்குள் நின்றுக் கொண்டிருந்த எரிபொருள் நிரம்பிய டேங்கர் லாரி திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் ஏற்பட்ட தீ, தொழிற்சாலை முழுவதும் பரவியது. இந்த விபத்தில் சிக்கி 24 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 18 பேர் இந்தியர்கள் எனத் தெரியவந்துள்ளது.

மேலும் 130-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தீ விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.