மாதிரிப்படம் pt web
உலகம்

15 நாட்களே ஆன பிஞ்சு குழந்தை... வறுமையின் காரணமாக உயிருடன் புதைத்த தந்தை.. பாகிஸ்தானில் அதிர்ச்சி!

பாகிஸ்தானில் வறுமையின் காரணமாக தந்தையே, பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தையை உயிருடன் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Angeshwar G

பாகிஸ்தானில் உள்ள சிந்து பகுதியில் வறுமையின் காரணமாக தயாப் என்ற நபர் தனது 15 நாள் குழந்தையை உயிருடன் புதைத்துள்ளார். தனது நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி இத்தகைய மோசமான செயலை செய்ததாக தயாப் ஒப்புக்கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

காவல்துறையினர் இதுதொடர்பாக கூறுகையில், “குழந்தைக்கு உடல்நிலையில் பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து, தயாப் தனது நிதி நெருக்கடி காரணமாக குழந்தைக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை. எனவே சாக்குப்பையில் வைத்து உயிருடன் குழந்தையைப் புதைத்துள்ளார்” என தெரிவித்தனர்.

குற்றத்தை ஒப்புக்கொண்ட தயாப் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தடயவியல் பரிசோதனைக்காக புதைக்கப்பட்ட குழந்தையின் உடல் எடுக்கப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி, பிரேத பரிசோதனை முறைகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லாகூரில் இதேபோன்று வேறு ஒரு சம்பவமும் அரங்கேறியுள்ளது. லாகூரில் உள்ள டிஃபென்ஸ் பி பகுதியில் தம்பதியினர் தங்களது வீட்டில் பணி புரிந்த 13 வயது குழந்தையை கடுமையான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இதுதொடர்பாக, பாதிப்புக்கு உள்ளான பெண்ணின் தாயார், தனது பெண் வேலை செய்த வீட்டு உரிமையாளர் தம்பதியின் மேல் புகாரளித்துள்ளார். புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்பின்னர், உரிமையாளர் ஹாசம் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவியை தேடும்பணி தீவிரப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

முதல் தகவல் அறிக்கையின்படி, பாதிக்கப்பட்ட குழந்தை, திருட்டு சந்தேகத்தின்பேரில், நிர்வாணமாகவும், உடல்ரீதியிலான இன்னல்களுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளார். குழந்தையின் கை மற்றும் மூக்கில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டதாகவும் தாய் தனது புகாரில் தெரிவித்துள்ளார். மருத்துவ சிகிச்சைக்குப் பின் தாயிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.