பெஞ்சமின் நெதன்யாகு எக்ஸ் தளம்
உலகம்

ஈரான் வீசிய ஏவுகணைகள்... தப்பிக்க ஓடினாரா இஸ்ரேல் பிரதமர்? வைரல் வீடியோ.. உண்மை என்ன?

Prakash J

இஸ்ரேல் - காஸா இடையேயான போரில், ஹமாஸ் அமைப்பினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினரும் ஆதரவு அளித்து வருகின்றனர். அவர்களை அழிக்கும்வகையில், இஸ்ரேல் தொடர்ச்சியாக வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதில், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் மற்றும் முக்கியத் தளபதி கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இதற்குப் பதிலடி கொடுப்போம் என ஈரான் தெரிவித்திருந்த நிலையில், நேற்று இரவு இஸ்ரேல் மீது 200-க்கும் அதிகமான ஏவுகணைகளை வீசியது. ஹைபர்சோனிக் வகையான ஏவுகணைகள் மூலம் இந்த தாக்குதலை ஈரான் நடத்தியிருக்கிறது. இதனால் அங்கு போர்ப்பதற்றம் நிலவுகிறது. இந்தியா உள்ளிட்ட நாடுகள் தமது குடிமக்கள் அங்கு தேவையின்றிச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. அதேநேரத்தில், ஈரானுக்குப் பதிலடி கொடுப்பதாக இஸ்ரேலும், அதற்கு துணை நிற்பதாக அமெரிக்காவும் தெரிவித்துள்ளன.

இதையும் படிக்க: உடலுறவுக்குப் பின் வெளியேறிய ரத்தப்போக்கு.. இணையத்தில் தகவல் தேடிய காதலர்.. காதலிக்கு நேர்ந்த சோகம்!

இந்த நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நேற்று ஏவுகணைகளைத் தொடர்ச்சியாக வீசியதையடுத்து அதிலிருந்து தப்பிக்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதுங்குக்குழியைத் தேடி ஓடியதாக இணையத்தில் வீடியோவுடன் செய்திகள் பரப்பப்படுகின்றன. ’இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதுங்குக்குழிக்கு தப்பி ஓடிய தருணங்கள்’ என்ற பெயரில், அந்த வீடியோ பதிவு வைரலாகி வருகிறது. மேலும் அதில், “யாராவது பெஞ்சமின் நெதன்யாகு ஒளிந்துகொள்ள இடம் கொடுங்கள். அவர் பதுங்குக்குழிக்குள் ஒளிந்துகொண்டு தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முனைகிறார். தன் நாட்டு மக்களை விட்டுவிட்டு அவர்போய் இந்தப் பதுங்குக்குழிக்குள் ஒளிந்துகொள்கிறார்” எனப் பதிவிட்டுள்ளனர்.

இதுகுறித்து ஆங்கில ஊடகங்கள் உண்மைத்தன்மையை வெளியிட்டுள்ளன. அதன்படி அந்த வீடியோ கடந்த மூன்று ஆண்டுகளுக்கு (2021) முன்பு எடுக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ள ஊடகங்கள், அந்த சமயத்தில் பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேலிய நாடாளுமன்றமான Knesseக்குள் நுழைவதற்காக விரைந்துசெல்வதைக் காட்டுகிறது.

இதை, முகநூல் பக்கத்தில் உள்ள பதிவுகள் உறுதிப்படுத்தியுள்ளன. ஆனால், இதைச் சில நெட்டிசன்கள் தவறாகப் பயன்படுத்தி, தற்போது ஈரான் தொடுத்த போரால் அவர் பயந்துபோய் பதுங்குக்குழியைத் தேடி ஓடுவதாகத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க: வேலை நேரம் தாண்டியும் தொடர்புகொள்ளும் முதலாளிகள்.. 88% சதவிகித பேர் பாதிப்பு.. ஆய்வில் தகவல்!