எலான் மஸ்க், ட்ரம்ப் எக்ஸ் தளம்
உலகம்

‘நான் வென்றால் அவருக்கு அரசு பதவி’ - மஸ்க்கிற்கு அழைப்பு விடுத்த ட்ரம்ப்... மஸ்க் ரியாக்‌ஷன் என்ன?

Prakash J

அமெரிக்காவில் நவம்பர் மாதம் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிறுத்தப்பட்டுள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் முன்னிறுத்தப்பட்டுள்ளார்.

இந்தச் சூழலில், ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட இருக்கிறார்.

இதனிடையே, உலகின் பெரும் பணக்காரரான டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க், டொனால்டு ட்ரம்ப்பின் தேர்தல் பிரசாரத்திற்காக நிதி நன்கொடை அளித்து வருகிறார். குறிப்பாக, 4.5 கோடி டாலர் (இந்திய மதிப்புபடி ரூ.375.80 கோடி) தேர்தல் நிதி கொடுப்பதாக மஸ்க் அறிவித்துள்ளார்.

தொடர்ந்து ட்ரம்ப்பிற்கு ஆதரவு அளித்து வரும் எலான் மஸ்க், கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி டொனால்டு ட்ரம்ப்பை நேர்காணல் செய்தார். இந்த நேர்காணல் எக்ஸ் தளத்தின் ஸ்பேசஸில் நடைபெற்றது. இந்தப் பேட்டியின்போது டொனால்டு ட்ரம்ப், கமலா ஹாரிஸைக் கடுமையாக விமர்சித்திருந்தார். உலகம் முழுவதிலும் நேரலையில் இருந்த இந்த நேர்காணலை சுமார் 13 லட்சம் பேர் கேட்டனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப்பை, கைதுாக்கி விடுவதற்கான அனைத்து வேலைகளையும் எலான் மஸ்க் செய்து வருகிறார் எனக் கூறப்படுகிறது. இத்துடன் டொனால்டு ட்ரம்பைப்போல் எலான் மஸ்க்கும் கமலா ஹாரிஸை அவ்வப்போது விமர்சித்து வருகிறார்.

இதையும் படிக்க: கொல்கத்தா மருத்துவர் கொலை: 1973-ம் ஆண்டு நிகழ்ந்த சம்பவத்தை எடுத்துக்காட்டிய தலைமை நீதிபதி!

இந்த நிலையில், “அதிபர் தேர்தலில், நான் வெற்றி பெற்றால் அரசின் ஆலோசகராக எலான் மஸ்க்கை நியமிப்பது குறித்து பரிசீலிக்க வாய்ப்பு உள்ளது” என டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இதற்கு எலான் மஸ்க் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர், “ட்ரம்ப்பின் அழைப்பை ஏற்று நாட்டுக்குச் சேவையாற்ற தயாராக உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்று வரும் ஜனநாயக கட்சியின் மாநாட்டில், அக்கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் பலரும் டொனால்டு ட்ரம்ப்பைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரான ஹிலாரி கிளிண்டன், “ட்ரம்ப், தன்னைப் பற்றி மட்டுமே சிந்திப்பவர். அவருடைய சொந்த வழக்கு விசாரணையிலேயே, தொடர்ந்து படுத்தே கிடப்பவர். அவர் எழுந்தபோது அவருக்கான சொந்த வரலாற்றை உருவாக்கினார். அதிபர் தேர்தலுக்கான போட்டியில் 34 கொடிய குற்றங்களை புரிந்ததற்காக நீதிமன்றத்தை வழக்கை எதிர்கொள்ளும் ஒரு நபர், அதிபர் தேர்தலில் போட்டியிடுவது என்பது இதுவே முதன்முறையாகும்” எனக் கடுமையாகச் சாடினார்.

ஹிலாரி கிளிண்டன்

அமெரிக்க அதிபர் தேர்தலில் சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகள் முடிவுகளின்படி, டொனால்டு ட்ரம்ப்பைவிட, கமலா ஹாரிஸின் கையே ஓங்கியிருப்பதாகவே கூறப்படுகிறது.

இதையும் படிக்க:ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் | உறவினரை எதிர்த்துப் போட்டியா.. களத்தில் குதிக்கும் வினேஷ் போகத்?