elon musk x page
உலகம்

”என் மகன் இறந்துவிட்டான்” - எமோஷனலான எலான் மஸ்க்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Prakash J

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க், டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் இயக்குநராக உள்ளார். இது தவிர, எக்ஸ் தளம் உள்ளிட்ட இன்னும் பிற நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். எப்போதும் சுறுசுறுப்புடன் எதற்கும் சளைக்காமல் பதில் சொல்லும் எலான் மஸ்க், சமீபத்தில் தன் மகன் இறந்துவிட்டதாகக் கூறி எமோஷனல் ஆன வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, தனது மூத்த மகன், 18 வயதாகும் முன்பே, பாலின மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்டதாகவும், தன்னை ஏமாற்றி, அதற்கான அனுமதி கடிதத்தில் கையெழுத்துப் பெற்றதாகவும் கூறி வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இதுகுறித்து அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், ”என் மகன் சேவியர் இறந்துவிட்டான். woke mind virus காரணமாகவே எனது மகன் உயிரிழந்துள்ளான்” என்கிறபோது அவர் அடுத்த வார்த்தை பேசமுடியாமல் திணறுகிறார்.

பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, "இந்த woke mindஐ எப்படியாவது அழித்தே தீர வேண்டும் என அப்போதுதான் முடிவு செய்தேன்” எனத் தெரிவிக்கிறார். குழந்தைகளிடையே பாலின மாற்று அறுவைசிகிச்சைகள் நடத்தப்படுவது குறித்த கேள்விக்குத்தான் எலான் மஸ்க் இந்த பதிலை அளித்தார். அதாவது, வோக் மைன்ட் வைரஸ் என்பது உண்மையான வைரஸ் இல்லை. பாலின மாற்று அறுவைச்சிகிச்சையைத்தான், அதன் எதிர்ப்பாளர்கள் அவ்வாறு அழைக்கிறார்கள். தனது மகன் சேவியர், தான் ஒரு திருநங்கை என அறிவித்து பாலின மாற்று அறுவைச்சிகிச்சை செய்துகொண்டு பெயரையும் விவியன் ஜென்னா வில்சன் என மாற்றிக்கொண்டதைத்தான் எலான் மஸ்க் இவ்வாறு கூறியிருக்கிறார்.

இதையும் படிக்க: அமெரிக்கா| ஒரேநாளில் ரூ.677 கோடி நிதி திரட்டிய கமலா ஹாரீஸ்.. அடுத்த அதிபர் பெண்தான்.. கணித்த ஜோதிடர்

இதுகுறித்து எலான் மஸ்க், ”இது எனது மூத்த மகன்களில் ஒருவருக்கு நடந்தது. சேவியருக்கான ஆபரேஷன் ஆவணங்களில் என்னை ஏமாற்றி கையெழுத்து வாங்கிவிட்டனர். எனது மகனுக்கு என்ன நடக்கிறது என்பதை நான் புரிந்துகொள்ளும் முன்பே எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. நான் இதில் கையெழுத்துப் போடவில்லை என்றால் சேவியர் தற்கொலை செய்துகொள்வான் எனச் சொல்லி கையெழுத்து வாங்கினார்கள். இந்த விஷயம் நீங்கள் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு மோசமானது. இதனை ஊக்குவிப்பவர்கள் அனைவரையும் சிறையில் அடைக்க வேண்டும். இதனால் நான் என் மகனை இழந்தேன். அதுமட்டும்தான் உண்மை” என அதில் கூறியிருக்கிறார்.

எலான் மஸ்க்கிற்கும் அவரது முதல் மனைவி ஜஸ்டின் மஸ்க்கிற்கும் கடந்த 2004இல் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒருவர்தான் இந்த விவியன் ஜென்னா வில்சன். இவரது உண்மையான பெயர் சேவியர் மஸ்க். இருப்பினும், கடந்த 2022இல் தன்னை திருநங்கையாக அறிவித்த அவர், தனது பெயரையும் விவியன் ஜென்னா வில்சன் என மாற்றிக்கொண்டார். மேலும், தந்தையுடன் எந்த விதத்திலும் தன்னை தொடர்புப்படுத்த விரும்பவில்லை என்று விவியன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: அமெரிக்கா | செய்யாத குற்றத்துக்காக 43 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பெண்.. உண்மை வெளிவந்தது எப்படி?