உலகம்

488 அடி உயரம் ஏறிய இளைஞர் - மூடப்பட்ட ஈஃபில் டவர்

webteam

ஈஃபில் டவரில் ஒரு இளைஞர் 149 மீட்டர் உயரத்தில் ஏறிய சம்பவத்தையடுத்து, அந்த டவர் தற்காலிகமாக மூடப்பட்டது.

பிரெஞ்ச் தலைநகர் பாரிஸின் அடையாளமாக திகழ்கிறது ஈஃபில் டவர். 324 மீட்டர் உயரம் கொண்ட இந்த டவர், பாரிஸ் நகரத்தின் முக்கிய சுற்றுலாத் தளமாக உலக புகழ் பெற்று விளங்குகிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். 

இந்நிலையில் இன்று இந்த டவரின் மீது ஒரு இளைஞர் யாருக்கும் தெரியாமல் ஏறத்தொடங்கினார். அவர் பாதியில் ஏறிக்கொண்டிருக்கும்போது அங்கிருந்தவர்கள் கவனித்தனர். இதனால் அங்கு இருந்த சுற்றுலா பயணிகளுக்குள் சலசலப்பு ஏற்பட்டது. அதற்குள் அங்கிருந்து பாதுகாப்பு அதிகாரிகள் ஒடி வந்து, வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்து சுற்றுலாப் பயணிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். 

அப்போது அந்த இளைஞர் 149 மீட்டர், அதாவது 488 அடி உயரத்தில் ஏறிக்கொண்டிருந்தார். அப்போது அவரிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அந்த இளைஞர் தன்னை தடுத்தால் அங்கிருந்து குதித்துவிடுவேன் என அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது. நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்னர் அவர் மீட்கப்பட்டார். இதனால் ஈஃபில் டவர் தற்காலிகமாக மூடப்பட்டது. அதைக்காண வந்த சில பயணிகள் காவல்துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் டவர் மீண்டும் திறக்கப்படவில்லை. டவர் மீது ஏறிய அந்த இளைஞர் ஏற்கனவே 980 அடி கொண்ட கோபுரம் ஒன்றின் மீது ஏறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.