ஃபௌசியா Google
உலகம்

துபாய்: முதல் முயற்சியில் கனரக வாகனத்திற்கான ஓட்டுநர் உரிமம் பெற்று டிரக் ஓட்டும் பெண்

Jayashree A

அரபு நாடுகளில் பெண்கள் படிப்பதும், வேலைக்கு செல்வதும் மிகவும் குறைவு. மேலும் உடை ரீதியாக, மன ரீதியாக இன்னும் ஆண்களுக்கு சமமான உரிமை அங்கு பெண்களுக்கு தரப்படவில்லை என்று கூறப்பட்டுவந்த நிலையில், அந்நாட்டு பெண் ஒருவர் கனரக வாகனம் (Heavy Vehicle) ஓட்டுவதற்கு முறையான உரிமம் பெற்று, டிரக் ஓட்டி வருவது அந்நாட்டினரை மட்டுமல்ல...பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதன் மூலம் அரபுநாட்டினரும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்துவருவது மகிழ்சியளிப்பதாக பலர் கூறுகின்றனர்.

துபாயைச் சேர்ந்தவர் ஃபௌசியா சஹூரான். 22 வயதான இவர் பிறக்கும்போத தந்தையை இழந்துள்ளார். பின் தாயின் அரவணைப்பில் வாழ்ந்த இவர், துணிச்சல் மிகுந்த பெண்ணாக வளர்ந்துள்ளார். படித்து பட்டம் பெற்று தாயை காப்பாற்றவேண்டும் என்ற நினைத்து வணிகவியல் துறையை எடுத்து படித்து பட்டமும் பெற்றார்.

படித்த படிப்பிற்கு தகுந்த வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றலாம் என்று நினைத்த சமயம் அவரது தாயாரும் இறந்துவிடவே... தனிமையை உணர்ந்துள்ளார். இருப்பினும் ஃபௌசியாவின் உறவினர்கள் அவருக்கு ஆறுதலாக இருந்துள்ளனர்.

இந்நிலையில் ஒரு ஆணுக்கு நிகராக பெண்ணாலும் எதையும் சாதிக்க முடியும் என்று நினைத்தவர், கனரக வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் பெற விண்ணப்பித்துள்ளார். துபாயைப் பொறுத்தவரை கனரக வாகனத்திற்கான ஓட்டுநர் உரிமம் பெறுவது என்பது சுலபமல்ல.

2013-ல் முதன்முறையாக இலகுரக வாகன டிரைவிங் லைசென்ஸ் பெற்ற ஃபௌசி, ஒன்பது வருடங்கள் கழித்துதான் கனரக வாகனங்கள் ஓட்டும் உரிமம் பெறலாம் என்ற சட்டத்தை அடுத்து, ஒன்பது வருடங்கள் கழித்த நிலையில், சமீபத்தில் கனரக வாகனங்கள் ஓட்டும் உரிமைக்கு விண்ணப்பித்தார்.

உடல் பரிசோதனை, பார்வை பரிசோதனை, கனரக வாகனங்கள் திறன்பட ஓட்டும் திறன் போன்ற பல தேர்வில் வெற்றிப்பெற்று முதல் முயற்சியிலேயே அதுவும் மிக சிறுவயதில் டிரைவிங் லைசன்ஸ் பெற்றுள்ளார்.

இவர் உரிமம் பெற்ற உடனேயே ஃபுஜைராவின் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மணல் கல் ஏற்றிச் செல்லும், டிரக் ஓட்டும் பணி கிடைத்துள்ளது. இவர் லாவகமாக அதே சமயத்தில், தேர்ந்த ஒரு டிரைவர்போல, துபாயில் டிரக் ஓட்டுவதைக்கண்டு அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர். டிரக் ஓட்டுவதால் இவர் தனது உடையில் மாற்றத்தைக்கொண்டு வரவில்லை... தங்களது பாரம்பரிய (புர்க்கா) உடை அணிந்துக்கொண்டு டிரக் ஓட்டுவது பலரின் புருவத்தையும் உயர்த்தியுள்ளது.

தனது பணி குறித்த அவர் பேசும்போது, “டிரக் ஓட்டுவது என்பது சாதாரணமாக கார் ஓட்டுவது போன்றது அல்ல... நீண்ட தூர பிரயாணத்தில் முழு கவனம் மற்றும் பாதுகாப்புடன் இருப்பது மிகவும் அவசியம். அதேபோல் டீசல், தண்ணீர் , மற்றும் டயரில் போதியளவு காற்று இருக்கிறதா என்பதையும் சோதனை செய்துகொள்ளவேண்டும்.” என்கிறார்.

ஒரு பெண் தனக்கு பிடித்த வேலையை செய்யும்போது அதனை நிறைவாகவும் முழுதிருப்தியுடன் செய்கிறாள். அப்போது அவ்வேலையானது முழுமை பெறுகிறது என்கிறார்.