உலகம்

எக்ஸ்ரேபோல சமூக நிலையை காட்டும் கொரோனா - ஐநா பொதுச்செயலாளர் கருத்து

webteam

சர்வதேச நிறுவனங்களில் ஏற்றத்தாழ்வுகளை உலக சக்திகள் புறக்கணிப்பதாக ஐநா  பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் கொரோனா வைரஸ் தொற்று ஒரு சமமான, நிலையான உலகத்தை உருவாக்க ஒரு தலைமுறை வாய்ப்பை உருவாக்கியுள்ளதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் வருடாந்திர சொற்பொழிவை இணையம் வழியாக வழங்கிய அன்டோனியோ குட்டெரெஸ், “சர்வதேச மட்டத்தில் அதிகாரம், செல்வம் மற்றும் வாய்ப்புகள் மிகவும் பரந்த மற்றும் நியாயமான முறையில் பகிரப்படுவதை புதிய உலகளாவிய ஒப்பந்தம் (என அழைக்கப்படுவது)  உறுதிப்படுத்தவதாகக் கூறினார்.

எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் சர்வதேச நிறுவனங்கள் அதிகார உறவுகளை மாற்றுவதற்குத் தேவையான சீர்திருத்தங்களைப் பற்றி சிந்திக்க மறுத்துவிட்டதாக சுட்டிக்காட்டிய அவர், “சர்வதேச நிறுவனங்களில் உயர்மட்டத்தில் சமத்துவமின்மை தொடங்குகிறது. அவற்றை சீர்திருத்தம் செய்யவேண்டும்” என்றும் குறிப்பிட்டார்.   

கொரோனா பற்றியும் பேசிய குட்டெரெஸ், “அது எக்ஸ்ரேபோல நாம் கட்டி எழுப்பிய சமூகத்தின் பலவீனமான எலும்புக்கூட்டில் எலும்பு முறிவுகளைக் காட்டுவதாகவும், அனைத்து இடங்களிலும் உள்ள  தவறான மற்றும் பொய்களை அம்பலப்படுத்துகிறது. தடையற்ற சந்தைகள் அனைவருக்கும் சுகாதார சேவையை வழங்கமுடியும் என்பது பொய். இனவெறிக்குப் பிந்தைய உலகில் நாம் வாழ்கிறோம் என்பது மாயை. நாம் அனைவரும் ஒரே படகில் இருக்கிறோம் என்பதும் கட்டுக்கதைதான்” என்றும் தெரிவித்தார்.