மாவோ நியாங் freepik & x page
உலகம்

மும்பையில் தைவான் தூதரகம்.. இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா!

மும்பையில் தைவான் அரசு தனது தூதரகத்தைத் தொடங்கியுள்ள நிலையில், சீனா அரசு இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Prakash J

சீன கடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறு தீவே, தைவான். ஆனால், தைவானை தனி நாடு அல்ல என்றும், அது சீனாவின் ஒரு பகுதி என்றும் தொடர்ந்து சீனா சொல்லிவருகிறது. இதற்கு தைவான் அரசு முற்றிலும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், தைவான் அதிபர் லாய் சிங் தேவ்-ஐ பிரிவினைவாதி என்றும், தைவான் பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் சீனா தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்துவருகிறது. தவிர, தைவானை அச்சுறுத்தும் விதமாக போர்ப் பயிற்சியிலும் சீனா ஈடுபடுவது வழக்கமாக உள்ளது. இதனால், பல ஆண்டுகளாக சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே முட்டல் மோதல் நிலவி வருகிறது.

அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு (அக்.10) முன்பு முப்படைகளை வைத்து, தைவானை கைப்பற்றுவது போன்று சீனா போர் ஒத்திகை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது தைவானை அச்சுறுத்தும் விதமாக 125 போர் விமானங்களையும், போர்க்கப்பல்களையும், சீனாவின் மிகப் பெரிய விமானம்தாங்கி கப்பலான லியோனிங்கையும் எல்லையில் நிறுத்தி சீனா பயிற்சி மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து, சீனா விமானப் படையின் 20 போர் விமானங்கள் மற்றும் 8 போர்க்கப்பல்கள் தைவான் எல்லைக்குள் கடந்த அக்.17ஆம் தேதி காலை 6 மணியளவில் (உள்ளூர் நேரப்படி) அத்துமீறி நுழைந்ததாக தைவான் பாதுகாப்புத் துறை வரைபடங்களுடன் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தது.

இதையும் படிக்க: ”சல்மான் கான் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை” - மகனுக்கு ஆதரவாக பேசிய தந்தை!

இந்த விவகாரம் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், இந்தியாவுடன் தைவான் நெருக்கம் காட்டுவதற்கு சீன அரசு இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் டெல்லி, சென்னையைத் தொடர்ந்து தற்போது மும்பையிலும் தைவான் அரசு தனது தூதரக அலுவலகத்தைத் திறந்துள்ளது. தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீனா உரிமை கொண்டாடிவரும் நிலையில் இந்தியாவுடனான தொடர்பைத் தைவான் வலுப்படுத்தி வருவது சீனாவுக்கு புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நியாங், ”சீனாவுடன் தூதரக உறவு வைத்துள்ள நாடுகள், தைவானுடன் அலுவலக உறவை ஏற்படுத்துவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். தைவான் விவகாரத்தை இந்தியா விவேகமாகவும், எச்சரிக்கையாகவும் கையாள வேண்டும். இந்தியா-சீனா இடையிலான உறவில் பாதிப்பு ஏற்படாத வகையில், தைவானுடன் இந்தியா அலுவலகரீதியாக தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என வலியுறுத்துகிறோம். இதுகுறித்து இந்திய தரப்புக்கு எங்கள் நிலைப்பாட்டை தெரிவித்திருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு குறியா? பிரதமர் இல்லத்தின் மீது பறந்த ட்ரோன்.. ஹிஸ்புல்லா தாக்குதல்!