சீனா திருமணம் எக்ஸ் தளம்
உலகம்

மணமகளை அலங்கரித்து கம்பத்தில் கட்டிவைக்கும் விநோத சடங்கு.. எழுந்த கண்டனம்.. சீனா அரசு அறிக்கை!

Prakash J

ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு விதமான மதச் சடங்குகள் பின்பற்றப்படுகின்றன. அதிலும் திருமணம் என்றால் சொல்லவே வேண்டாம். அந்தந்த நாடுகளுக்கு ஏற்ப அவர்கள் இனத்தில் வித்தியாசமான முறையில் திருமணச் சடங்குகள் செய்யப்படுகின்றன. அந்த வகையில் சீனாவில் நடைபெற்ற ஒரு சடங்கு அந்நாட்டு மக்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதுகுறித்து வைரலாகும் வீடியோ ஒன்றில், திருமணத்திற்குத் தயாரான மணமகள் ஒருவர், அதற்கான ஆடை, ஆபரணத்துடன் அலங்கரித்து அழைத்து வரப்படுகிறார். பின்னர், அவரை மணமகனின் நண்பர்கள் தூக்கிச்சென்று தொலைபேசி கம்பம் ஒன்றில் கட்டி வைக்கின்றனர். அப்போது, அந்த இளம்பெண் சத்தம் போட்டு அலறுகிறார். உதவி கேட்டு, தப்பியோட முயற்சிக்கிறார். ஆனால், ஒருவரும் இதனை தடுக்க முன்வரவில்லை. சுற்றி நிற்கும் பலரும் சிரித்துக்கொண்டே கட்டாயப்படுத்தி, டேப் உதவியால் கை, கால்களை கம்பத்துடன் சேர்த்து கட்டிப் போட்டுவிடுகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க: இந்து Vs இஸ்லாம் மத போதகர்கள்| பாகிஸ்தான் டிவி விவாத நிகழ்ச்சியில் நேரடித் தாக்குதல்.. வைரல் வீடியோ!

நூற்றாண்டு பழைமையான இந்த பாரம்படிய திருமணச் சடங்கு பற்றிய வீடியோ வைரலானதும் இணையதளவாசிகள் பலரும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்த விநோத சடங்கு பற்றி மணமகனின் நண்பரான யாங், ”நாங்கள் அனைவரும் சிறுவயதில் இருந்து மணமகனின் நண்பர்களாகப் பழகி வருகிறோம். இந்த விளையாட்டை விளையாட அந்த ஜோடி முன்பே ஒப்புக்கொண்டுவிட்டது. இது எங்கள் உள்ளூர்ப் பழக்கம். நாங்கள் எல்லோரும் நல்ல நண்பர்கள். அவர்களுக்கு வேறு எந்த தீங்கு தரும் விசயமும் நாங்கள் செய்யவில்லை. கம்பத்தில் மணமகளை கட்டிவைக்கும்போது, மணமகனும் உடன் இருந்ததுடன், மணமகளின் பாதுகாப்பை நாங்கள் அனைவரும் கவனித்துக் கொண்டோம். இந்தச் சூழலை தவறாக புரிந்து கொள்ளக் கூடாது என சுற்றியிருந்தவர்களிடம் வலியுறுத்தினோம்” எனத் தெரிவித்துள்ளார்.

எனினும், சமூக வலைதளத்தில் இதற்கு பல்வேறு தரப்பிலும் இருந்து கடும் கண்டனம் எழுந்தது. இதுகுறித்து பயனர் ஒருவர், “அடுத்தவரின் துயரத்தில் உங்களுடைய மகிழ்ச்சியை கட்டியெழுப்புவது என்பது உண்மையில் வேதனையளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். மற்றொருவர், ”மணமகளுக்கு ஏதேனும் நடந்துவிட்டால், யார் அதற்கு பொறுப்பு” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில், இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதன் தொடர்ச்சியாக, யாங் மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றவர்கள் இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டனர். இதுபோன்ற நடப்பில் இல்லாத, பழக்கவழக்கங்களை கைவிடும்படி மக்களை வலியுறுத்தும் முயற்சிகள் வலுப்படுத்தப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

இதையும் படிக்க: தெ.ஆ. | பண்ணைக்குள் நுழைந்த கறுப்பின பெண்கள்.. சுட்டுக் கொன்று பன்றிகளுக்கு இரையாக்கிய உரிமையாளர்!