மத்தேயூஸ் பாவ்லக் எக்ஸ் தளம்
உலகம்

பிரேசில்| மாரடைப்பால் 19 வயது பாடிபில்டர் உயிரிழந்த சோகம்.. இதுதான் காரணமா?

பிரேசிலைச் சேர்ந்த 19 வயது பாடிபில்டர் ஒருவர் மாரடைப்பு காரணமாக, அவரது வீட்டில் இறந்துகிடந்தார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Prakash J

நடனம், விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் நபர்கள், சமீபகாலமாக எதிர்பாராதவிதமாக திடீரென கீழேவிழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகமாகி வருகின்றன. அதிலும், கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் இளைஞர்கள் பலர் மாரடைப்பால் திடீரென உயிரிழப்பது தொடர்கதையாகி வருகின்றன.

சமீபத்தில்கூட உ.பியில் 19 வயது சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அந்த வகையில், பிரேசிலைச் சேர்ந்த 19 வயது பாடிபில்டர் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர், மத்தேயூஸ் பாவ்லக் (Matheus Pavlak). 19 வயதான இவர், அந்நாட்டில் வளர்ந்துவரும் பாடி பில்டிங் நட்சத்திரமாக உருவெடுத்தார். 5 வருடங்களுக்கு முன்னர் நடந்த உடல் பருமன் கொண்டவர்கள் எடையை குறைக்கும் போட்டியில் பங்கெடுத்த மத்தேயூஸ், அதிலிருந்த்து தனது பாடி பில்டிங் ஆர்வத்தை பெற்றார்.

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், "உங்கள் கனவு எவ்வளவு கடினமானதாக, சாத்தியமற்றதாக இருந்தாலும், நீங்கள் அதை விரும்பினால், நிச்சயம் அதை அடைவீர்கள். நான் செய்தேன்" என்ற தலைப்புடன் பாவ்லக் தனது நம்பமுடியாத உடல் மாற்றத்தின் படங்களை முன்பு வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: அன்று கேலி கிண்டலுக்கு ஆளானவர்... இன்று பாராலிம்பிக்கில் சாதனை..! யார் இந்த தீப்தி ஜீவன்ஜி?

பிரேசிலில், நடந்த பல்வேறு பாடி பில்டிங் போட்டிகளில் பங்கேற்று புகழை சம்பாதித்தார். கடந்த ஆண்டு U23 போட்டியில் வென்றதன்மூலம், அவரது சொந்த ஊரில் ’மிஸ்டர் புளூமெனாவ்’ எனப் புகழ்பெற்றார். அடுத்து, சமீபத்தில் நடைபெற்ற பாடி பில்டிங் போட்டிகளில் அவர் நான்காவது மற்றும் ஆறாவது இடத்தைப் பிடித்தார்.

19 வயதிலேயே மத்தேயூஸ் பாவ்லக் தனது பயிற்சியின் மூலம் தேர்ந்த பாடி பில்டருக்கான உடல் வாகுவை கொண்டிருப்பதைக் கண்டு அனைவரும் ஆச்சர்யப்பட்டுபோன வேளையில்தான், பிரேசிலின் சாண்டா காத்ரீனா மாகாணத்தில் உள்ள தனது வீட்டில் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி மதியம் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அவருடைய மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தேயூசின் மரணம், உடலை அசாதாரணமாக மாற்ற பாடி பில்டிங் பயிற்சியில் பயன்படுத்தப்படும் அனபாலிக் ஸ்டெராய்ட்களின் [ஊக்கமருந்துகளின்] பாதுகாப்புத் தன்மை மீதான சந்தேகங்களை எழுப்பியுள்ளது. மத்தேயூசும் இவ்வளவு இளம்வயதில் அவரின் அசாதாரண உடல்வாகைப் பெற இதுபோன்ற ஸ்டெராய்ட்களை பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக பிரேசிலைச் சேர்ந்த மற்றொரு பாடிபில்டரான ஜோனாஸ் ஃபில்ஹோ தன்னுடைய 29-வது வயதில் கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் மேஜர்கான் என்ற பாடிபில்டர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 50 வயதில் காலமானார்.

இதையும் படிக்க: வடகொரியா | வெள்ளத்தால் உயிர்பலி.. தடுக்கத் தவறிய அதிகாரிகளுக்கு மரண தண்டனை!