உலகம்

"அனுமனை போல இந்தியா எங்களை காப்பாற்ற வேண்டும்" பிரேசில் அதிபர் கோரிக்கை !

jagadeesh

அனுமன் சஞ்சீவி மூலிகையை கொண்டுவந்து லக்ஷ்மன் உயிரை காப்பாற்றியது போல இந்தியா ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை வழங்கி பிரேசில் மக்களை காக்க வேண்டும் என ராமாயணத்தை மேற்கோள்காட்டி பிரேசில் அதிபர் ஜேர் போல்செனாரோ பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளோர்.

இந்தியாவில் கொரோனா பரவத் தொடங்கியதும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் உள்ளிட்ட சில மருந்துகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது. மலேரியா உள்ளிட்ட பல்வேறு நோய்களைக் குணப்படுத்த இந்த மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் கொரோனாவையும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் கட்டுப்படுத்தும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தெரிவித்தன.

இந்நிலையில், அமெரிக்காவில் மிகத் தீவிரமாக கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில்‌ ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தைத் தராவிட்டால் அதற்குரிய பதிலடியை இந்தியா சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டும் வகையில் பேசியிருந்தார். இந்நிலையில், மனிதாபிமான அடிப்படையில் பாரசிட்டமால், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அமெரிக்கா மற்றும் அண்டை நாடுகளுக்கு மத்திய அரசு மருந்தை அனுப்ப உள்ளது. மேலும் மருந்து ஏற்றுமதி விவகாரத்தை அரசியலாக்க விரும்பவில்லை எனவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் பிரேசிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரேசில் அதிபர் ஜேர் போல்செனாரோ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், "கடவுளின் அவதாரமான அனுமன், ராமனின் தம்பியான லட்சுமனை காப்பாற்ற இமயமலையிலிருந்து சஞ்சீவி மலை மூலிகையை மருந்தாக கொண்டு வந்து காப்பாற்றினார். அதேபோல இந்தியாவும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை வழங்கி பிரேசில் மக்களை காப்பாற்ற வேண்டும். இந்தியாவும் பிரேசிலும் ஒருங்கிணைந்து இந்தக் கொரோனா போரை எதிர்கொண்டு மக்களின் ஆதரவுடன் வெல்ல வேண்டும்" என தெரிவித்திருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அரசு " இதுபோன்ற சூழலில் இந்தியா தன்னால் முடிந்த உதவிகளை நிச்சயம் பிரேசில் மக்களுக்கு செய்யும். இருநாட்டு அதிகாரிகளும் தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்பை ஆராய்ந்து வருகிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.