தரையிறங்கிய ஸ்டார்லைனர், சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் pt web
உலகம்

ஹீலியம் கசிவா? பாதுகாப்பாக தரையிறங்கிய ஸ்டார்லைனர்; சுனிதா & வில்மோர் திரும்புவது எப்போது?

PT WEB

செய்தியாளர் பால வெற்றிவேல்

அதிகளவில் இருந்த ஹீலியம் கசிவு

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் விதமாக நாசா 2009 ஆம் ஆண்டில் இருந்து தனியார் நிறுவனங்களை ஊக்குவித்து வருகிறது. ஏற்கெனவே எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சார்பில் சர்வதேச விண்வெளி மையத்திற்கு டிராகன் விண்கலங்கள் தொடர்ச்சியாக அனுப்பப்படுகின்றன . இந்நிலையில் மற்றொரு முன்னணி விமான போக்குவரத்து நிறுவனமான போயிங் சார்பில் மனிதர்களை ஏற்றி செல்லும் விண்கலங்கள் உருவாக்கப்பட்டு அவை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்புவதற்கான சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. போயிங் ஸ்டார் லைனர் திட்டம் என பெயரிடப்பட்டுள்ள முதல் போயிங் விண்கலத்தின் சோதனை ஓட்டம் ஜூன் 5ஆம் தேதி நடைபெற்றது.

சுனிதா வில்லியம்ஸ்

விண்வெளி பயண அனுபவம் கொண்ட சுனிதா வில்லியம்ஸ், புட்ஜ் வில்மோர் ஆகியோர் போயிங் விண்கலம் மூலமாக சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் சென்றனர். 15 நாட்களுக்குள் பூமி திரும்ப வேண்டும். இதுதான் திட்டம் ஆனால் தொழில்நுட்பக் கோளாறு மற்றும் விண்வெளி குப்பைகள் காரணமாக திட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. போயிங் விண்கலத்தின் ஹீலியம் கசிவு அதிக அளவில் ஏற்பட்டதன் காரணமாக திரஸ்டர்கள் செயல்படாத ஒரு நிலை இருந்ததாக நாசா தெரிவித்தது . ஹீலியம் கசிவை சரி செய்வதற்கு சர்வதேச விண்வெளி வீரர்கள் மற்றும் பூமியில் இருந்து நாசா விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை.

திட்டமிட்டபடி பூமிக்குத் திரும்பிய விண்கலம்

சுனிதா வில்லியம்ஸ், புட்ஜு வில்மோர் ஆகியோர் அடுத்த வருடம் ஜனவரியில் மற்றொரு திட்டம் மூலமாக பூமிக்கு திரும்புவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. விண்வெளி வீரர்கள் இல்லாத போயிங் விண்கலம் செப்டம்பர் ஏழாம் தேதி பூமி வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் திட்டமிட்டபடி போயிங் விண்கலம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிரிந்து பூமியை நோக்கி வந்தது. இந்திய நேரப்படி காலை 9.31 மணிக்கு அமெரிக்காவில் உள்ள நியூ மெக்சிகோ மாகாணத்தில் உள்ள மணல் திட்டில் பாராசூட் மூலமாக தரையிறங்கியது.

திரஸ்டர்களின் ஹீலியம் கசிவு அதிகமாக இருந்ததாக முன்னதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் போயிங் விண்கலம் பூமிக்கு திருப்பும் போது திரஸ்டர்கள் நல்ல முறையில் செயல்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இன்னும் அடுத்த நான்கு மாதங்கள் சுனிதா மற்றும் வில் மோர் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருப்பார்கள் என்றும் அடுத்த டிராகன் திட்டத்தில் அவர்கள் பூமிக்கு திரும்புவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. ஏற்றிச் சென்றவர்கள் விண்வெளியிலேயே இருக்க ஏற்றிச்சென்ற வாகனம் பூமிக்கு தரை இறங்கி இருப்பது போயிங் மீதான நம்பகத்தன்மையை கேள்வியெழுப்பியுள்ளது.