உலகம்

கொரோனா என்பது மனநோய் – கொரோனாவிலிருந்து மீண்ட பெலாரஸ் அதிபர் அதிரடி

கொரோனா என்பது மனநோய் – கொரோனாவிலிருந்து மீண்ட பெலாரஸ் அதிபர் அதிரடி

Veeramani

கொரோனா என்பது ஒரு மனநோய். நான் எந்த மருந்தும் எடுத்துக் கொள்ளாமலேயே கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தேன் என்று தெரிவித்துள்ளார் பெலாரஸ் நாட்டின் அதிபர் அலெக்ஸாண்டர் லுகாசென்கோ.

லுகாசென்கோ ஆரம்பம் முதலே கொரோனாவை அலட்சியம் செய்து வந்தார். கொரோனாவுக்கு மக்கள் பயப்பட தேவையில்லை. வீட்டு மருத்துவத்தை பின்பற்றுங்கள் என்று கூறினார். மேலும் நாட்டில் பொதுமுடக்கத்தை அவர் மறுத்தார்.

சில நாட்களுக்கு முன்பு ராணுவ முகாமில் பேசிய லுகாசென்கோ “ நான் இப்போது கொரோனா தொற்றிலிருந்து எவ்வித மருந்தும் எடுத்துக்கொள்ளாமலேயே மீண்டுவந்து உங்கள் முன்பு நிற்கிறேன். மருத்துவர்கள் இது அறிகுறியற்ற நோய் என்று கூறியுள்ளனர். நம் நாட்டில் 97 சதவீதம் பேர் அறிகுறி இல்லாமலேயே இந்த நோய்க்கு பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. அதனால் நாம் கொரோனாவுடன் வாழப் பழகிக் கொள்ளவேண்டும். இந்நோய் ஒரு மனநோய்தான், அதனால் வோட்கா குடித்தபடி கொரோனாவை விரட்டுங்கள்” என்று கூறியுள்ளார்

1994 முதல் ஆட்சியில் இருக்கும் லுகாசென்கோ கொரோனா பாதிப்பின் உச்சத்தில் உலகமே முடங்கிக்கிடந்த மே மாதம் ராணுவ அணிவகுப்பு நடத்தினார். நெருக்கடியான காலகட்டத்திலும் தொடர்ந்து அரசு அலுவல்கள், சந்திப்புக்களை நடத்தியபடியே இருந்தார்.

பெலாரஸ் நாட்டில் இதுவரை 67,670 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 553 பேர் உயிரிழந்துள்ளனர். 61,442 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.