வங்கதேசம் எக்ஸ் தளம்
உலகம்

வன்முறை பரவுவதாக வதந்தி| ஒட்டுமொத்த சமூக ஊடகங்களுக்கு மீண்டும் தடை.. வங்கதேச அரசு அதிரடி உத்தரவு!

Prakash J

அண்டை நாடான வங்கதேசத்தில், அவாமி லீக் கட்சி அரியணையில் உள்ளது. அதன் பிரதமராக மீண்டும் இந்த ஆண்டு தொடக்கம் முதல் ஷேக் ஹஸினா பதவியில் இருந்து வருகிறார். இந்த நிலையில், 1971இல் பாகிஸ்தானுக்கு எதிராக வங்கதேச சுதந்திரப் போரில் போராடிய வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இதனால் பிறருக்குப் பாதிப்பு ஏற்பட்டதால், இந்த இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த 2018இல் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, அந்த இடஒதுக்கீடு அப்போது ரத்து செய்யப்பட்டது. ஆனாலும், இதனை எதிர்த்து அந்நாட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை முடிந்து, ’’தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலையில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்” என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தற்போது ஆட்சியில் இருக்கும் அவாமி லீக் கட்சியும், இதைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையறிந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கதேச மாணவர்கள் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். இதனால், கடந்த ஜூலை மாத மத்தியில் அந்நாட்டில் வன்முறை வெடித்தது. தலைநகர் டாக்கா மட்டுமல்லாது, ராஜ்ஷாஹி, குல்னா, சட்டோக்ரம் உள்ளிட்ட ஒவ்வொரு நகரங்களுமே வன்முறைகளால் வதைபட்டன.

இதையும் படிக்க: 31 ஆண்டுகளாக பாலியல் வன்புணர்வு! 73 வயது நபர் மீது பெண் தொடுத்த வழக்கு.. ரத்து செய்த நீதிமன்றம்!

இந்த வன்முறையில் 105க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாகவும், 2,500க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவித்தன. பின்னர், போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு, நாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இணையச் சேவைகள் முடக்கப்பட்டன. மேலும், இந்த வன்முறையின்போதே இடஒதுக்கீட்டு வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வங்கதேச அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் தீர்ப்பின்போது, "அரசு வேலைவாய்ப்புகளில் 93 சதவீதம் மதிப்பெண் அடிப்படையிலும், மீதமுள்ள 7 சதவீதம் 1971ஆம் ஆண்டு வங்கதேச சதந்திரப் போராட்டத்தில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கும் மற்ற வகுப்பினருக்கும் வழங்கப்படும்" என உத்தரவிட்டது. இதையடுத்து, படிப்படியாக வன்முறை குறையத் தொடங்கியது.

முன்னதாக, வன்முறை காரணமாக கடந்த ஜூலை 18ஆம் தேதி நாடு முழுவதும் சமூக வலைதளங்கள் தடை செய்யப்பட்டிருந்தன. பின்னர் வன்முறை கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின்பு, சமூக வலைதளங்களுக்கான தடை திரும்பப் பெறப்பட்டது.

இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 2) மீண்டும் மாணவர்கள் போராட்டம் நடத்தப் போவதாக வதந்தி பரவியதால், வங்கதேச அரசு, டெலிகிராம், ஃபேஸ்புக், யூடியூப், வாட்ஸ்அப், எக்ஸ், டிக்டாக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதனால், வங்கதேசத்தில் உள்ள 120 மில்லியனுக்கும் அதிகமான மொபைல் நெட்வொர்க் பயனர்கள் பாதிக்கப்படுவார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: “என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா?”-ஒலிம்பிக்கில் தங்கம்வென்ற சகவீராங்கனைக்கு இன்பஅதிர்ச்சி கொடுத்த வீரர்