ஹிரோஷிமா புதியதலைமுறை
உலகம்

1945 ஆகஸ்ட் 6 - ஹிரோஷிமா தாக்குதல் | ஜப்பானை அமெரிக்கா உருக்குலைத்த தினம்!

Jayashree A

ஹிரோஷிமா... இந்த பெயரைக்கேட்டாலே அமெரிக்கா ஜப்பான் மீது குண்டு வீசியதுதான் நமக்கு நினைவுக்கு வரும். வரலாற்றில் அந்த மோசமான சம்பவம் நடந்த தினம் இன்று.

சரியாக, இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானின் ஹிரோஷிமா மீது 1945 ஆகஸ்ட் 6 அன்று அமெரிக்கா அணுகுண்டு வீசியது. கிட்டத்தட்ட 79 வருடங்கள் உருண்டோடி இருந்தாலும், மக்கள் மனதில் ஏற்பட்ட வடு இன்றளவும் மறையவில்லை.

1939 முதல் 1945 வரை நடைபெற்ற இரண்டாம் உலகப்போரில் அச்சு நாடுகள் மற்றும் நேசநாடுகள் (Allied and Axis Powers) என 30 மேற்பட்ட நாடுகள் இரண்டு எதிரெதிர் கூட்டணிகளாக பிரிந்து சண்டையிட்டுக் கொண்டன.

இதில் துளிகூட மனிதாபிமானம் இன்றி இரு கூட்டணி நாடுகளும் மக்கள்தொகை மிகுந்த மையங்கள் மீது குண்டு வீசியும், அணு ஆயுதங்களை பயன்படுத்தியும் போரினை மேற்கொண்டு வந்தன. இதனால் இரண்டாம் உலகப்போரின் முடிவு படுகோரமாக அமைந்தது.

1945 ஆகஸ்ட் 6 ம் தேதி காலை எப்போதும் போல ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ஜேன் சூ தீவில் 2 லட்சத்திற்கும் மேல் உள்ள மக்கள் போர் சூழலில் ஒருவித பதற்றத்துடன் இயங்கிக் கொண்டிருந்தனர். அச்சமயம், திடீரென்று வானில் ஒரு பயங்கர வெடிச் சத்தம் கேட்டது.

அடுத்த நொடி, அப்பகுதி குடியிருப்பு பகுதிகளில் கிட்டத்தட்ட 1 கி.மீ பரப்பிலிருந்த ஆயிரக்கணக்கான கட்டடங்கள் சேதமடைந்து தீயால் கொழுந்துவிட்டு எரிந்தன. பலர் சத்தமே இல்லாமல் உடல் கருகி இறந்தனர். என்ன நடந்தது என்று தெரிவதற்குள் அடுத்த சில நிமிடங்களில் ஷிரோஷிமாவே உருக்குலைந்தது. அதில் பல லட்சம் மக்கள் உயிரிழந்திருந்தனர்.

என்ன வெடி சத்தம், என்ன நடக்கிறது என்று ஜப்பான் மக்கள் குழம்பியிருந்த நிலையில் கிட்டத்தட்ட 16 மணி நேரம் கழித்து அமெரிக்கா ஷிரோஷிமா மீது அணுகுண்டு வீசியதை அறிவித்தது. அதற்குள் லட்சக்கணக்கானோர் இறந்திருந்தனர்.

இந்த துயரம் அடங்குவதற்குள் அப்பகுதியில் குண்டுவீச்சு தாக்கத்தால் கதிர் வீச்சு ஆரம்பித்திருந்தது. இந்த கதிர்வீச்சால் பல ஆயிரம் பேர் மரணமடைந்தனர். ஹிரோஷிமாவை விட்டு தள்ளி இருந்த பல ஊர்களிலும்கூட கதிர்வீச்சு ஆபத்தால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வந்தனர்.

சோகம் என்னவெனில், இத்துடன் அமெரிக்கா சமாதானமாகவில்லை... தொடர்ந்து மேலும் மூன்று நாட்கள் கழித்து ஜப்பானின் நாகசாகி மீது, மீண்டும் அணுகுண்டை வீசி நாசப்படுத்தியது.

அமெரிக்காவின் இச்செயலால் உலகமே அதிர்ந்தது. இதனை அடுத்து வேறு வழியில்லாமல் ஜப்பான் அமெரிக்காவிடம் சரணடைந்தது. அதன்பிறகே இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது.

இருந்தபோதிலும், தான் செய்த மன்னிக்க முடியாத தவறிற்காக இன்றுவரை ஜப்பானிடம் அமெரிக்கா மன்னிப்போ, வருத்தமோ தெரிவித்தது இல்லை.

மக்கள் வசிக்கும் பகுதியில் அணுகுண்டு வீசிப்பட்டது இன்றும் போர் குற்றமாகவே கருதப்படுகிறது. அப்படி இருந்தும் இந்தப் படுகொலையை நியாயப்படுத்தும் அமெரிக்க அரசின் நிலைப்பாடு இன்றளவும் பெரும் சர்ச்சையே!