உலகம்

4 ஆண்டு பயணம்... சூரிய குடும்பத்தின் சிறுகோளில் தரையிறங்கிய நாசா விண்கலம்!

JustinDurai

சூரிய குடும்பத்தில் உள்ள சிறுகோள் ஒன்றை ஆய்வு செய்வதற்காக நாசா அனுப்பிய விண்கலம் நான்காண்டுகள் பயணத்திற்குப் பின் வெற்றிகரமாக தரையிறங்கியது.

சூரிய குடும்பத்தில் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதைக்கும் வியாழன் கிரகத்தின் சுற்றுப் பாதைக்கும் இடையே நூற்றுக்கணக்கான சிறுகோள்கள் சூரியனை சுற்றி வருகின்றன. இந்த சிறுகோள்களை பற்றி ஆராய நாசா திட்டமிட்டுள்ளது. பென்னு என்று பெயரிடப்பட்டுள்ள சுமார் 500 மீட்டர் அகலம் கொண்ட ஒரு சிறுகோளினுள் இறங்கி ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதற்காக ‘ஓசிரிஸ்-ரெக்ஸ்’  எனும் தனி விண்கலம் ஒன்றை கடந்த 2016-ம் ஆண்டு புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப்கேனாவிரல் ஏவுதளத்திலிருந்து ராக்கெட் மூலம் நாசா ஏவியது.

2018ம் ஆண்டு பென்னு குறுங்கோளின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்து தரையிறக்க பயணத்தை மேற்கொண்டது. இந்நிலையில், நேற்று ஓசிரிஸ்-ரெக்ஸ்’  தனி விண்கலம் பென்னு குறுங்கோளில் வெற்றிகரமாக தரையிறங்கியது. பென்னு குறுங்கோளில் இருந்து பாறைத் துகள்களை ஆய்வுக்காக பூமிக்கு எடுத்துவர திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ஓசிரிஸ் ரெக்ஸ் தனது இயந்திரக் கரங்களை கொண்டு பாறைத் துகள்களையும், தூசித் துகள்களையும் சேகரிக்கத் தொடங்கியுள்ளது.

பென்னு குறுங்கோளில் தனது பணிகளை முடித்துக்கொண்டு ஓசிரிஸ்-ரெக்ஸ் விண்கலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அங்கிருந்து புறப்பட்டு, 2023ம் ஆண்டு செப்டம்பரில் பூமிக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் சார்பில் ஏவப்பட்ட ஹயாபுசா-2 விண்கலம், மற்றொரு சிறுகோளான லியுகுவில் இருந்து கடந்த ஆண்டு பாறைத் துகள்களை எடுத்தது. அந்த விண்கலம் தற்போது பூமியை நோக்கி திரும்பிக் கொணடிருக்கிறது.