forest freepik
உலகம்

அமெரிக்கா: யூடியூப் பார்த்து காட்டுக்குள் வசிக்கச் சென்ற மூவர்.. இறுதியில் நடந்தது என்ன?

Prakash J

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தின் ஸ்பிரிங்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ரெபெக்கா வான்ஸ். இவர் தன் 14 வயது மகனுடனும் சகோதரி கிறிஸ்டினுடனும் இணைந்து, நகர வாழ்க்கையைத் தவிர்த்துவிட்டு காட்டு வாழ்க்கை வாழ முடிவெடுத்துள்ளார். அதாவது இயற்கையோடு பின்னிப் பிணைந்து அமைதியான சூழலில் வாழ்க்கையை நடத்துவதற்காக இவர்கள் மூவரும் ராக்கி மலைப் பிரதேசத்துக்குப் பயணமாகி உள்ளனர்.

அதுவும் காட்டுக்குள் வசிப்பது எப்படி என்பது குறித்து யூட்யூப்பில் பார்த்துவிட்டு காட்டுக்குள் பயணமாகியுள்ளனர். இதற்காக, கடந்த கோடைக்காலத்தின்போது காட்டுக்குள் சென்றிருக்கின்றனர். அமெரிக்காவின் ஸ்பிரிங்ஸ் மாகாணத்தில் பொதுவாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் கோடை காலமாகக் கருதப்படுகிறது.

forest

கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் ரெபெக்கா, அவரது மகன், சகோதரி கிறிஸ்டின் ஆகிய மூவரும் இன்னொரு சகோதரி ஜாரா வீட்டுக்குச் சென்று தங்களுடைய புதிய வாழ்க்கை குறித்த பயணத்தை அவரிடம் எடுத்துரைத்துள்ளனர். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார் ஜாரா. மேலும் அவர்களுடைய பயணத்துக்கும் தடை விதித்துள்ளார். ஆனால், அவர்கள் அதிலிருந்து மாறவில்லை.

இதுகுறித்து ரெபெக்காவின் மற்றொரு சகோதரி ஜாரா, “கிறிஸ்டின், ரெபேக்கா இருவரும் நாற்பது வயதைத் தொட்டிருந்தனர். அவர்கள் வீட்டைத் தாண்டிச் செல்ல முடிவெடுத்தனர். ஆனால், வெளி உலகில் வாழும் அனுபவம் இல்லாமல்தான் இருந்தனர். குறிப்பாக, மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் எப்படி வாழ்வது என்பது குறித்து அவர்கள் யூடியூப் தளங்களைப் பார்த்துதான் அறிந்துகொண்டனர். நாங்கள் எவ்வளோ தடுத்துப் பார்த்தோம். அவர்கள் முடிவில் இருந்து மாறவில்லை” என்கிறார்.

dead body

இதனிடையே, குன்னிசன் தேசிய வனப்பகுதியில் உள்ள கோல்ட் க்ரீக் கேம்ப் கிரவுண்டில் கடந்த ஜூலை 9ஆம் தேதி, மோசமாக சிதைந்திருந்த இருவரின் உடல்களைக் கண்டதாக மலையேறும் நபர் ஒருவர் கூறினார். மற்றொரு நபரின் உடல், சுமார் 2,900 மீட்டர் உயரத்தில் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இது இவர்கள் மூவரென கூறப்படுகிறது.

இதுகுறித்த விசாரணையில், “மூவரின் மரணத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆகவே உரிய பரிசோதனைகள் முடியும்வரை அதற்கான காரணத்தை வெளியிடப்பட மாட்டாது” என காவல் துறை தெரிவித்துள்ளது. இதற்கிடைய அவர்கள் தங்களுக்கு என ஒரு வசிப்பிடத்தைக் காட்டுக்குள் கட்ட முயன்றிருக்கின்றனர் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து விசாரணை அதிகாரிகள், “கடும் பனியின் தாக்கம் அல்லது பட்டினியின் காரணமாக அவர்கள் இறந்திருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார். கடந்த கோடை காலத்தில் அங்கு முகாமிட்ட இந்த மூவரும் குளிர்காலத்தில் இறந்ததாகத் தெரிகிறது. ஏனெனில் இந்த முறை அங்கு, ஒரு மாதத்திற்கு முன்பே பனிக்காலம் தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது.

forest

இதை எதிர்பார்க்காமல் அவர்கள் வசிப்பிடத்தைக் கட்டி முடிக்க முடியாமலும் உணவு இல்லாமலும் பாதிக்கப்பட்டு இறந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. அதேநேரத்தில், காட்டுப் பகுதியில் உயிர் வாழ்வது குறித்த புத்தகங்களை நிறைய வாங்கிச் சேமித்துள்ளனராம்.