உலகம்

அமெரிக்க தேவாலயத்தில் கொல்லப்பட்ட 27 பேருக்காக கண்ணீருடன் மக்கள் அஞ்சலி

webteam

டெக்சாஸ் தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்காக அப்பகுதி மக்கள் மெழுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். 

அமெரிக்கா, டெக்சாஸ் மாகாணத்தின் வில்சன் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்துக்குள் மக்கள் அனைவரும் வார பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், கூடியிருந்த மக்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியதில் தேவாலய பாதிரியாரின் 14 வயது மகள் உள்பட 27 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து தாக்குதலை நடத்திவிட்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற அந்த மர்ம நபர், அருகில் உள்ள கவுடாலுப் என்ற பகுதியில் சடலமாக கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? ஆவேசத்தில் பொதுமக்கள் யாரும் சுட்டுக் கொன்றார்களா? என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. இத்தாக்குதல் தொடர்பாக டெக்சாஸ் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.