உலகம்

24 வயதில் மாரடைப்பால் களத்திலேயே உயிரிழந்த பிரேசில் கால்பந்து வீரர்

24 வயதில் மாரடைப்பால் களத்திலேயே உயிரிழந்த பிரேசில் கால்பந்து வீரர்

Sinekadhara

விளையாடும்போது மைதானத்தில் மயங்கிவிழுந்த 24 வயது பிரேசில் கால்பந்து வீரர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் 24 வயதான கால்பந்து வீரர் அலெக்ஸ் அபோலினாரியோ. ஞாயிற்றுக்கிழமை போர்ச்சுக்கல் FC Alverca  அணிக்காக விளையாடிக் கொண்டிருந்த அலெக்ஸ் விளையாட்டின் 27-ஆம் நிமிடத்தில் திடீரென மைதானத்திலேயே மயங்கி விழுந்திருக்கிறார். அவரை Vila Franca de Xira மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். அன்றிரவே அவர் சுயநினைவுக்குத் திரும்புவார் என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

ஆனால், இன்று அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை தெரிவித்தது. அலெக்ஸுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக FC Alverca க்ளப் தனது அனைத்து பணிகளையும் தற்காலிகமாக நிறுத்தியிருக்கிறது. மேலும் அவரது குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது.