சிறைவிதித்த உஸ்பெகிஸ்தான் நீதிமன்றம் Twitter
உலகம்

இருமல் மருந்தால் 68 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் - 23 பேருக்கு சிறைவிதித்த உஸ்பெகிஸ்தான் நீதிமன்றம்

ஜெனிட்டா ரோஸ்லின்

2022ம் ஆண்டு இறுதியில், இந்தியாவின் marion biotech நிறுவனம் தயாரித்த Doc-1 Max என்ற இருமல் மருந்தை அருந்திய குழந்தைகள் 68 பேர், உஸ்பெஸ்கிஸ்தானில் பரிதாபமாக உயிரிழந்திருந்தனர். கிட்டத்தட்ட 86 குழந்தைகள் இருமல் மருந்து அருந்தி பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 68 குழந்தைகள் உயிரிழந்தனர்.

குழந்தைகள் இறந்ததற்கு காரணமானதாக கூறப்படும் இருமல் மருந்தான Doc-1 Max, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்து என்று பின்னாள்களில் தெரியவந்தது. இதையடுத்து இம்மருந்தை உஸ்பெகிஸ்தானில் இருக்குமதி செய்த இந்தியர் உட்பட பலர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் மருந்தை தயாரித்த சிங் ராகவேந்திர பிரதாப் என்பவருக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் இவர் மீது வரி ஏய்ப்பு, தரமற்ற அல்லது போலி மருந்துகளை விற்பனை செய்தல், அலுவலகத்தினை துஷ்பிரயோகம் செய்தல், போலி ஆவணம் தயாரித்தல், லஞ்சம் வாங்குதல் போன்ற குற்றங்கள் மெய்ப்பிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதில் தொடர்புடை மற்ற நபர்களுக்கும் (மொத்தம் 23 நபர்களுக்கு) சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. marion biotech என்ற நிறுவனத்தின் உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Doc-1 Max

Doc-1 Max என்ற இந்த மருந்தில் தொழிற்துறையில் கரைப்பானாக பயன்படுத்தும் diethylene glycol என்ற நச்சுப்பொருள் கலந்துள்ளது தெரியவந்துள்ளது. இவற்றை சிறிய அளவில் பயன்படுத்தினால் கூட ஆபத்துதான் என்றும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கு குறித்து அந்நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையில், “இதில் பாதிக்கப்பட்டுள்ள உயிரிழந்த குழந்தைகள் ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தலா 80,000 டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் . மேலும் போதைப்பொருளால் பாதிக்கப்பட்ட மற்ற எட்டு குழந்தைகளின் பெற்றோருக்கு, தலா 16,000 - 40,000 டாலர் வரை கொடுக்கவேண்டும் . இந்த இழப்பீடு தொகையை குற்றவாளிகள் 7 பேரிடம் இருந்து பெற வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.