உலகம்

“தனிஷ் சித்திகி இறந்த விதம் குறித்து எங்களுக்கு தெரியாது” - தலிபான் செய்தித் தொடர்பாளர்

நிவேதா ஜெகராஜா

தலிபான் போரில் கொல்லப்பட்ட இந்திய புகைப்படக்கலைஞர் தனிஷ் சித்திகி இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளது அமெரிக்க அரசு.

தனிஷ் சித்திகி இறப்பு குறித்து தலிபான் செய்தித் தொடர்பாளர் விளக்கம் கூறும்போது, “புகைப்பட செய்தியாளர் தனிஷின் இறப்புக்கு மன்னிப்பு தெரிவித்துக்கொள்கிறோம். அவர் இறந்த விதம் எங்களுக்கு தெரியாது. பத்திரிகையாளர்கள் போர்க்களத்துக்குள் செல்லும்போது எங்களிடம் தகவல் தெரிவித்து சென்றால், உரிய பாதுகாப்புகளை எங்களால் வழங்க இயலும்” எனக்கூறியுள்ளார்.

ஆஃப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வரும் நிலையில் அந்நாட்டு அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் அங்கு மோதல் தீவிரமடைந்துள்ளது. அவற்றைப் படம் பிடிக்கச் சென்ற பிரபல செய்தி நிறுவனத்தின் புகைப்படைக்கலைஞர் தனிஷ் சித்திகி தலிபான் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதாக நேற்றைய தினம் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் ஆங்கில செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித், தனிஷ் சித்திகி மரணத்திற்கு இரங்கல் தெரிவித்ததுடன் அவர் இறந்த விதம் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே தனிஷ் சித்திகின் மரணத்திற்கு அமெரிக்க அரசும் இரங்கல் தெரிவித்துள்ளது.