வீடியோ ஸ்டோரி

விழுப்புரம்: கட்டிமுடிக்கப்பட்ட ஒரே மாதத்தில் உடைந்த தடுப்பணை; மீண்டும் கட்டித்தர கோரிக்கை

Veeramani

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை திறந்து ஒன்றரை மாதத்தில் உடைந்துள்ளது. இது தொடர்பாக கவனக்குறைவாக செயல்பட்டதாக தலைமை பொறியாளர் உட்பட நான்கு பொறியாளர்களை தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளது தமிழக அரசு.

விழுப்புரம் மாவட்டம் தாளவனூர் கிராமம் மற்றும் கடலூர் மாவட்டம் எனதிரிமங்கலம் கிராமம் ஆகியவற்றுக்கு இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 25 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில், கடந்த 2019-ஆம் ஆண்டு தடுப்பணை கட்டும் பணி தொடங்கப்பட்டது. இந்த தடுப்பணை கட்டும் பணிகள் கடந்த 2020-ஆம் ஆண்டு முடிக்கப்பட்டு, தடுப்பணை திறக்கப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் திறக்கப்பட்ட இந்த தடுப்பணையின் கரைப்பகுதி, ஒன்றரை மாதத்திற்கு உள்ளாகவே உடைந்து நீர் வெளியேறியதால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர் விவசாயிகள்

தமிழகத்தில் கடந்த ஆண்டு பெய்த தொடர் மழை காரணமாக தென்பெண்னை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுமார்‌ 14 அடி உயரம் கொண்ட தடுப்பணை முழுவதும் நிரம்பும் அளவிற்கு நீர் வழிந்தோடியது. ஒரு மாதத்திற்கு மேலாகத் தடுப்பணையில் தண்ணீர் தேங்கியிருந்தது. குறிப்பாக இந்த தடுப்பணை மூலமாக தேக்கி வைக்கும் நீரானது, எனதிரிமங்கலம் அடுத்த நீர் வரப்புகளான சுமார் 14 ஏரிகளுக்குமே செல்கிறது. மேலும் விழுப்புரம் தளவானூர் அடுத்துள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் முக்கிய நீர் ஆதாரமாக இருக்கிறது.

இந்த நிலையில் அணைக்கட்டின் எனதிரிமங்கலம் பகுதியில் உள்ள கரைப்பகுதியில் திடீரென உடைப்பு ஏற்பட்டதால் தடுப்பணையில் இருந்து நீர் வெளியேறியது. உடைப்பு குறித்துத் தகவலறிந்து வந்த விழுப்புரம் மாவட்ட பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் ஜவகர் மற்றும் உதவி செயற் பொறியாளர் சுமதி ஆகியோர் தலைமையிலான பொதுப் பணித்துறையினர் ஆய்வு மேற்கொண்டு அணையின் பாதுகாப்பு கருதி  மதகுகள் வழியாகச் சேமிக்கப்பட்ட தண்ணீரை வெளியேற்றினர்.

சேமிக்கப்பட்ட தண்ணீர் அப்போது வெளியேற்றப்பட்டதால் தடுப்பணையை ஒட்டி இருக்கக் கூடிய தளவானூர், கொங்கரகொண்டான், திருப்பாச்சனூர், வெளியம்பாக்கம், சித்தாத்தூர்திருக்கை, அரசமங்கலம், கள்ளிப்பட்டு, பூவரசன்குப்பம் உள்ளிட்ட கிராம விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

இந்த விபத்து இயற்கையாக ஏற்பட்டதா அல்லது சில மனித தவறுகளால் ஏற்பட்டதாக என்பது குறித்து உயர்மட்ட குழுவிலிருந்து பொதுப்பணி செயலாளர் உட்பட பலர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அதே சூழலில் மணல் அரிப்பு ஏற்பட்ட பகுதியில் ரூபாய் 7 கோடி மதிப்பீட்டில் ஒரு தடுப்புச் சுவர் கட்டுவதற்கான கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. தடுப்பணை என்பது நன்றாக இருக்கிறது, தற்போது தடுப்புச் சுவரில் மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது உடனடியாக சீர் செய்யப்படும் என  அப்போதைய அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

ஆனால் இன்று வரை பணிகள் எதுவும் நடைபெறவில்லை, அந்த வாக்குறுதி வெறும் கானல் நீராகி போய்விட்டது என்கின்றனர் விவசாயிகள். மேலும் இந்த அணையை உடனடியாக சரி செய்து கட்டாவிட்டால், அடுத்த மாதம் அனைத்து விவசாயிகளையும் அழைத்துச்சென்று திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட போவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இன்னும் சில நாட்களில் மழை பெய்யும்நிலை இருப்பதனால் உடனடியாக அணையைக் கட்டும் பணியை தொடங்க வேண்டும் என்கின்றனர் விவசாயிகள் இல்லையென்றால் , இந்த ஆண்டும் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாமல் வீணாகச் சென்று கடலில் கரைந்து விடும் என்கின்றனர் அவர்கள். தமிழக அரசு உடனடியாக சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை மேற்கொண்டு அவரிடமிருந்து தண்டனை தொகையாக பணம் வசூலித்து இந்த அணையை கட்டித்தர வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்