வீடியோ ஸ்டோரி

"தைரியமிருந்தால் என் வீட்டில் ரெய்டு நடத்தட்டும்!" - அட்ரஸ் கொடுத்து சவால்விட்ட உதயநிதி

JustinDurai

தமது சகோதரி வீட்டில் வருமான வரி சோதனை நடத்துபவர்கள் தைரியமிருந்தால், தனது வீட்டில் வந்து நடத்தட்டும் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். பாஜகவின் மிரட்டலுக்கு திமுகவின் கிளைச் செயலாளர்கள் கூட பயப்படமாட்டார்கள் என்று அவர் கூறினார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே முக்கோணம் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரசாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின், "இரண்டு நாள்களுக்கு முன்பு தமிழகம் வந்த பிரதமர் மோடி, என்னைப் பற்றி தவறாகப் பேசினார். அதேபோல்,
உதயநிதி வளர்ச்சி முக்கியமா, தமிழ்நாடு வளர்ச்சி முக்கியமா என்று அமித் ஷா கேட்டார்.

ஆனால், நான் இப்போது சொல்கிறேன்... என் வளர்ச்சியைவிட தமிழக வளர்ச்சியே முக்கியம். இருப்பினும் அமித் ஷா மகன் ஜெய் ஷாவின் சொத்துமதிப்பு ரூ.120 கோடியாக உயர்ந்துள்ளது.

உங்களின் உருட்டல், மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன். எனது சகோதரி வீட்டுக்கு ஐடி ரெய்டு அனுப்பி சோதனை போட்டு அவர்களை மிரட்டிப் பார்க்கிறார்கள். அதுபோல சென்னையில் உள்ள என் வீட்டிற்கு வந்து சோதனையிட்டுப் பாருங்கள்" என தன் வீட்டு விலாசம் சொல்லி சவால் விடுத்தார்.

"பிரதமர் மோடிக்கு உதயநிதி மட்டுமல்ல... இங்கு உள்ள கிளைச் செயலாளர்களும் பயப்பட மாட்டார்கள்" என்றார் உதயநிதி.

முன்னதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரையின் வீட்டில் 8 மணி நேரத்துக்கு மேலாக வருமான வரி சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.