வீடியோ ஸ்டோரி

2004 சுனாமியில் இருந்து மீண்டவரின் வாழ்க்கை போராட்டம் - உதவுமா அரசு?

Veeramani

2004-ஆம் ஆண்டு உலகை உலுக்கிய சுனாமி ஆழிபேரலையில் இறந்துவிட்டதாக கருதப்பட்டு, மறுபிறவி எடுத்தவர் 17 வருடங்களாக அரசின் நிவாரண உதவிக்காக காத்திருக்கிறார். முதல்வரின் கவனத்தை ஈர்க்க தற்போது முதல்வர் தனிப்பிரிவில் மனு கொடுத்துள்ளார் அவர்.

2004 சுனாமியால் பாதிப்புக்குள்ளான ஒவ்வொரு குடும்பத்திலும், வேதனைகளும் இழப்புகளும் வடுக்களாக நீடிக்கின்றன. அவர்களில் ஒருவர்தான் கிழக்கு கடற்கரை சாலை கானாத்தூரைச் சேர்ந்த சண்முகவேல். சுனாமியின்போது அடித்துச்செல்லப்பட்ட சண்முகவேல், மறுநாள் டிசம்பர் 27 ஆம்தேதி புதையுண்ட மணலில் இருந்து மீட்கப்பட்டார்.

உயிர் இல்லை என குறிப்பிடப்பட்டு தாம்பரம் அரசு மருத்துவமனை சவகிடங்கிற்கு சண்முகவேலின் உடல் அனுப்பப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு முன்பாக சண்முகவேலின் உடலை பரிசோதித்த மருத்துவர் நாடித்துடிப்பு இருப்பதை கண்டு அதிர்ந்து, உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவிற்கு அவரை மாற்றியுள்ளனர்.

4 மாதத்திற்கு மேல் கோமாவில் இருந்து மீண்டார் சண்முகவேல். சுனாமியில் மணலுக்குள் புதையுண்டவருக்கு கடல்நீருடன் ஒரு கிலோவிற்கு மேலான மணல் வயிற்றுக்குள் புகுந்துள்ளது. குடல் இறக்க அறுவை சிகிச்சை மேற்கொண்டு உடல் ரீதியாக கடுமையான பிரச்சனைகளை சந்தித்து வருகிறார் சண்முகவேல்

17 வருடங்களாகியும் தற்போது வரை அரசு நிவாரணம் கிடைக்காத சண்முகவேல், முதல்வரின் கவனத்தை ஈர்க்க முதல்வர் தனிப்பிரிவில் மனு கொடுத்துள்ளார். 3 மகள் மற்றும் ஒரு மகன் படிப்பிற்காக ஈரோடு மாவட்டத்திற்கு குடிபெயர்ந்துவிட்ட நிலையில், தனக்கு நிவாரணமும், அரசு அறிவித்த வேலையை பிள்ளைகளில் ஒருவருக்கும் வழங்கவேண்டும் என்ற இவரது 17 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.