வீடியோ ஸ்டோரி

பாம்பு, மண்புழு வரிசையில் விவசாயிகளின் உற்ற தோழனாக உதவும் சிலந்தி

Veeramani

பயிர்களை வெட்டும் எலிகளை உண்ணும் பாம்பு, மண்ணை பாதுகாக்கும் மண்புழுக்களின் வரிசையில் விவசாயிகளின் உற்ற தோழனாக மாறியிருக்கின்றன சிலந்திகள். பூச்சிகளிடம் இருந்து பயிர்களை காக்கும் சிலந்திகளை குறித்து பார்க்கலாம்.

திருவாரூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா தாளடி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன. பல்வேறு இடங்களில் தற்போது சம்பா, முன்சம்பா பயிர்கள் அறுவடை செய்யப்படுகின்றன.

தாளடி மற்றும் பின் சம்பா பயிர்கள் இன்னும் ஓரிரு மாதங்களில் அறுவடைக்கு வர உள்ளன. தற்போது கதிர் வரக்கூடிய சூழல் உள்ள பயிர்களில் சிலந்திப்பூச்சிகள் வலை கட்டி உள்ளன. காலை நேரத்தில் பனி பெய்யும் நேரத்தில் வயல்வெளிகளில் அந்த சிலந்தி வலைகள் படர்ந்திருப்பது ரம்மியமாக காட்சியளிக்கிறது. இந்த சிலந்தி வலைகள், பயிர்களுக்கு இயற்கையான கேடயம் போல செயல்படுவதாக கூறுகிறார்கள் விவசாயிகள்.

வயல் முழுவதும் சிலந்திகள் வலை கட்டும்போது எந்தவித மருந்தும் அடிக்கக் கூடாது என வேளாண்மை துறை இணை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார் சிலந்திகளில் 70க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன அத்தனை சிலந்தி வகைகளும் விவசாய நிலங்களில் கதிர் வரக்கூடிய பயிர்களில் வலை கட்டி விவசாயிகளுக்கு உதவுவதாக வேளாண்துறையினர் கூறுகிறார்கள். பயிர்களுக்கு நன்மை செய்யும் பூச்சிகள் குறித்த விழிப்புணர்வை விவசாயிகளுக்கு ஏற்படுத்தியிருப்பதால், இந்த சிலந்திகளை அழிக்காமல் விவசாயிகளும் பாதுகாப்பதாக வேளாண்துறையினர் தெரிவிக்கிறார்கள்.