வீடியோ ஸ்டோரி

பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழக வீரர் மாரியப்பனுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

Sinekadhara

பாரா ஒலிம்பிக் போட்டி தொடங்குவதையொட்டி அதில் பங்கேற்கும் தமிழக வீரர் மாரியப்பன் மற்றும் அவரது தாயார் உள்ளிட்ட குடும்பத்தினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

ஒலிம்பிக் போட்டிகள் நடந்து முடிந்ததையடுத்து பாரா ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் வரும் 24-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 5 வரை நடைபெற உள்ளது. இதில் இந்தியாவிலிருந்து 9 பிரிவுகளில் 54 மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். கடந்த ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் இம்முறையும் போட்டியில் பங்கேற்கிறார்.

பெங்களூருவில் பயிற்சிபெற்றுவரும் மாரியப்பன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நம்பிக்கையாக நீங்கள் இருக்கிறீர்கள் என்று மாரியப்பனை ஊக்குவித்தார். இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தனக்கு தேவையான உதவிகளை செய்துள்ளது என்று மாரியப்பனும் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து மாரியப்பனின் தாயார், சகோதரர்களுடனும் பிரதமர் மோடி கலந்துரையாடினார். மாரியப்பனுக்கு என்ன உணவு பிடிக்கும் என பிரதமர் கேட்டதற்கு, நாட்டுக்கோழி சூப் மிகவும் பிடிக்கும் என தாயார் சரோஜா பதிலளித்தார்.