டிரெண்டிங்

தருமபுரி: பிறந்த சிலமணி நேரமே ஆன பச்சிளம் பெண்குழந்தை சாலையில் கிடந்த பரிதாபம்

kaleelrahman

அரூர் அருகே பிறந்து சிலமணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தையை சாலையில் போட்டுச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே கீரைப்பட்டி கிராமத்தில், வரட்டாறு பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் செல்லும் சாலையில், இன்று காலை பிறந்து சிலமணி நேரமே ஆன பெண் குழந்தையை, அடையாளம் தெரியாத நபர் சாலையில் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர். இந்நிலையில் அந்த வழியாக சென்ற பொதுமக்கள், குழந்தையின் அழுகை சத்தத்தை கேட்டு, சாலையில் குழந்தை கிடப்பதை பார்த்து கிராம நிர்வாக அலுவலர் ரமேஷிடம் தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து ரமேஷ் அரூர் காவல்நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டி.எஸ்.பி தமிழ்மணி, குழந்தையை மீட்டு, கீரைப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்களிடம் ஒப்படைத்தார்.

இதனை தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அதன் பிறகு சிசு காப்பகத்தில் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பச்சிளங்குழந்தையை வீசி சென்றது யார் என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிறந்து சிலமணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தையை சாலை வீசி சென்ற சம்பவம் கீரைப்பட்டி கிராம பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.