டிரெண்டிங்

கொல்கத்தாவில் தர்ணாவை தொடங்கினார் மம்தா - குவியும் துணை ராணுவப்படை

rajakannan

காவல் ஆணையரை விசாரணை மேற்கொள்வது எதிர்ப்பு தெரிவித்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் தர்ணா போராட்டத்தை தொடங்கியுள்ளார்.

நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க தெற்கு கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்திற்கு சிபிஐ அதிகாரிகள் சென்றனர். அங்கு, சிபிஐ அதிகாரிகளை கொல்கத்தா போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிபிஐ அதிகாரிகளை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர், சிபிஐ அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர்.

இதனையடுத்து, காவல் ஆணையர் ராஜீவ் குமார் வீட்டிற்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி சென்றார். மேலும், கொல்கத்தா மேயர், மாநில டிஜிபி உள்ளிட்டோரும் உடனடியாக வந்தனர். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மம்தா பானர்ஜி எல்லோரிடமும் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்கு பின்னர் பேசிய மம்தா கூட்டாட்சி முறையை பாதுகாக்க வலியுறுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். உடனடியாக, கொல்கத்தா மெட்ரோ சாலைப் பகுதியில் தர்ணாவையும் தொடங்கினார். அவருடன் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் உள்ளிட்டோர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை வந்து சேர்ந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மூத்த சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து வருவதாக சிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர் ராவ் கூறியுள்ளார். சட்ட வல்லுநர்களின் ஆலோசனைப்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.