டிரெண்டிங்

திருமாவளவன் தலைமையில் இன்று மாநில சுயாட்சி மாநாடு - பினராயி விஜயன் பங்கேற்கிறார்

திருமாவளவன் தலைமையில் இன்று மாநில சுயாட்சி மாநாடு - பினராயி விஜயன் பங்கேற்கிறார்

rajakannan

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், மாநில சுயாட்சி மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது. 

மாநாட்டிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமை தாங்குகிறார். திராவிடர் கழக தலைவர் வீரமணி முன்னிலை வகிக்கிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சி பொது செயலாளர் சிந்தனை செல்வன் வரவேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, தி.மு.க செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர், ஜி. ராமகிருஷ்ணன், முத்தரசன், ஜவாஹிருல்லா, காதர் மொய்தீன் உள்ளிட்ட பல தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, மாநில சுயாட்சி மாநாடு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியிட்ட அறிக்கையில், “மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பது திமுக இந்திய ஜனநாயகத்துக்கு வழங்கிய கொடை. 1960களில் தமிழகத்தில் வெடித்தெழுந்த மொழி உரிமை போராட்டத்தின் நீட்சியாக முன்வைக்கப்பட்டதே மாநில சுயாட்சி முழக்கம். 1960களில் இருந்ததைவிட முனைப்போடும் மூர்க்கத்தோடும் இப்போது மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன. கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டி புதைத்துவிட்டு எல்லா அதிகாரங்களையும் மத்திய அரசில் குவிக்கிறார்கள். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கட்சி, ஒரே ஆட்சி என்ற நிலைக்கு இந்தியாவை கொண்டு செல்கிறார்கள். 

இப்படியே போனால் தற்போதுள்ள பாராளுமன்ற ஜனநாயக முறை ஒழிக்கப்பட்டு அதிபர் ஆட்சி முறை இங்கே வந்துவிடக் கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. அந்த ஆபத்தில் இருந்து நாட்டை காப்பாற்றும் நோக்கத்தோடுதான் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில சுயாட்சி மாநாட்டை கூட்டுகிறது. மாநில பட்டியலில் இருந்த கல்வி அவசரநிலை காலத்தில்தான் பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அதன் பின்னர் பள்ளிக்கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை மத்திய அரசின் பிடிக்குள் சென்றுவிட்டது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு பாடத்திட்டங்கள் பின்பற்றப்படும் நிலையில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை மட்டும் அடிப்படையாக கொண்டு நீட் நுழைவுத்தேர்வு நடத்துவதும் அதன் அடிப்படையில்தான்.

மருத்துவ படிப்புக்கான சேர்க்கை என்பது மாநில உரிமைகளை பறிப்பதாகும். அதுமட்டுமின்றி, நவோதயா பள்ளிகள் என்னும் புதிய கல்விக் கொள்கையின் மூலம் இந்தி, சமஸ்கிருத திணிப்புக்கும் மத்திய அரசு அடிகோலுகிறது. அரசியலமைப்பு சட்டத்தில் உறுதியளிக்கப்பட்ட கூட்டாட்சி தத்துவத்தை உயர்த்தி பிடிப்பதும், மாநில உரிமைகளை பாதுகாப்பதன் மூலம் இந்தியாவின் ஜனநாயகத்தை காப்பாற்றுவதும் இன்று நமது உடனடி கடமைகளாகியுள்ளன. இவற்றை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகளை ஓரணியில் திரட்டும் அறைக்கூவலோடு இந்த மாநாட்டை விடுதலை சிறுத்தைகள் ஒருங்கிணைக்கிறது. மாநில உரிமைகளை காக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இக்களத்தில் அனைத்து ஜனநாயக சக்திகளும் அணிதிரள வேண்டுமாய் அழைக்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.