டிரெண்டிங்

“சாதிப் பெயரை சொல்லி கிருஷ்ணசாமி பேசியதில் வருத்தம்” - திருமாவளவன்

rajakannan

சாதிப் பெயரை சுட்டிக்காட்டி கிருஷ்ணசாமி பேசியது வருத்தமும், வேதனையும் அளிக்கிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் தென்காசி தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு கிருஷ்ணசாமி தோல்வி அடைந்தார். தேர்தல் முடிவுகள் குறித்து நுங்கம்பாக்கத்திலுள்ள தன்னுடைய தலைமை அலுவலகத்தில் அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். இந்தச் செய்தியாளர் சந்திப்பின்போது ஊடகங்களை அவர் கடுமையாக விமர்சித்தார். அத்துடன், கேள்வி எழுப்பிய செய்தியாளரை நோக்கி, ‘நீ என்ன சாதி’ என கிருஷ்ணசாமி கேட்டார். அதனால், செய்தியாளர்களுக்கும், அவருக்கும் இடையே கடுமையான சலசலப்பு ஏற்பட்டது. 

இந்நிலையில், கிருஷ்ணசாமி சாதியை குறிப்பிட்டு பேசியது குறித்து திருமாவளவன் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் உட்பட கட்சி தலைவர்கள் சாதிப் பெயரை குறிப்பிட்டு பேசுவது தவறானது. சாதிய, மதவாத சக்திகளை தமிழக மக்கள் தோல்வி அடைய வைத்துள்ளனர். சிதம்பரத்தில் நான் அங்குலம், அங்குலமாக வென்றுள்ளேன். ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது” என்று கூறினார்.