டிரெண்டிங்

சாலையில் நடந்து சென்ற சிறுமியிடம் செயின் பறிப்பு.. வாகன சோதனையில் சிக்கிய வாலிபர்கள்

kaleelrahman

கன்னியாகுமரி மாவட்டம் எஸ்.டி மங்காடு பகுதியில் சாலையில் நடந்து சென்ற 12 வயது சிறுமியிடம் இருசக்கர வாகனத்தில் வந்து செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது. பைக் பறிமுதல் செய்யப்பட்டது. 

கன்னியாகுமரி மாவட்டம் எஸ்.டி மங்காடு பகுதியை சேர்ந்தவர் தனபால். இவரது பத்து வயது மகனும், பனிரெண்டு வயது மகளும், மங்காடு சாலையில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்று கொண்டிருந்த போது, அந்த சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரில் ஒருவர் இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கி நடந்து சென்ற 12 வயது சிறுமி அணிந்திருந்த இரண்டு சவரன் செயினை பறித்து விட்டு அதே இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பி சென்றனர்.

 இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை நித்திரவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் இருந்த சி.சிடி.வி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், நேற்று மதியம் 12 மணி அளவில் நித்திரவிளை போலீசார் விரிவிளை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்களிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். 

இந்த விசாரணையில் அவர்கள் மங்காடு பகுதியில் நடந்து சென்ற சிறுமியிடம் நகை திருடியவர்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து நித்திரவிளை போலீசார் குமரி மாவட்டம் திங்கள் சந்தை மற்றும் நெய்யூர் பகுதியை சேர்ந்த ஜெபின், அபீஷ் என்ற இரு இளைஞர்களை கைது செய்து அவர்கள் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் இவர்கள் பல திருட்டு வழக்குகளில் தொடர்பு உடையவர்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.