டிரெண்டிங்

திருமங்கலம்: கல்குவாரி நீரில் மூழ்கி மாணவன் பலி... 2-வது நாளாக உடலை தேடும் தீயணைப்புத்துறை

திருமங்கலம்: கல்குவாரி நீரில் மூழ்கி மாணவன் பலி... 2-வது நாளாக உடலை தேடும் தீயணைப்புத்துறை

kaleelrahman

திருமங்கலம் அருகே பயன்பாடற்ற கல்குவாரியில் குளிக்கச் சென்ற 12 ஆம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.


திருமங்கலம் அருகே உள்ள கீழ உரப்பனூர் பகுதியில் சௌந்தர் என்பவருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. இது கடந்த சில வருடங்களாக பயன்பாடற்ற நிலையில் உள்ளது. இதனால் மழை நீர் தேங்கி கிடக்கும் கிடங்காக மாறியதால் விடுமுறை காலங்களில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் அங்கு சென்று குளிப்பது வழக்கம்.

திருமங்கலம் சோழவந்தான் சாலை பகுதியைச் சேர்ந்த ஆண்டிச்சாமி -விமலா தம்பதியினரின் இரண்டாவது மகன் ராகேஷ் (16). இவர் திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் தனது நண்பர்கள் 5 பேருடன் சௌந்தர் கல்குவாரிக்கு குளிக்கச் சென்றுள்ளார்.


நண்பர்களுடன் ஜாலியாக குளித்துக் கொண்டிருந்த போது ராகேஷ் ஆழமான பகுதி சென்றதால் திடீரென தண்ணீரில் மூழ்கி தத்தளித்து உள்ளார். உடன்சென்ற நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியாததால் நீரில்முழ்கி உயிரிழந்துள்ளார். தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக திருமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கல்குவாரியில் சிறுவனின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். கடந்த இரு தினங்களாக சிறுவனின் உடலை மீட்க முடியாமல் தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர். மேலும் பேரிடர் மீட்பு வாகனங்கள் நவீன கேமராக்கள் கொண்டு வந்தும் விரைவாக அவரை மீட்பதற்கு முறையான உபகரணங்கள் இல்லாததால் உடலை மீட்பதில் தொய்வு ஏற்பட்டது.


இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி செய்தனர். தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த திருமங்கலம் நகர் போலீசார் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் மாணவனின் உடல் மீட்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவனின் உடலை தொடர்ந்து தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

நண்பர்களுடன் குளிக்கச் சென்ற 12ஆம் வகுப்பு மாணவன் கல்குவாரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக திருமங்கலம் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.