டிரெண்டிங்

விபத்தில் இறந்தவரின் உடலை மீட்கச்சென்ற ஆம்புலன்ஸ் சுவற்றில் மோதி விபத்து...

kaleelrahman

நாமக்கல்லில் லாரியை முந்தி செல்லும்போது சக்கரத்தில் சிக்கி இருசக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழந்தார். அவரது உடலை மீட்கச் சென்ற தனியார் ஆம்புலன்ஸ், மின் வாரிய அலுவலக சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. 


நாமக்கல் மாவட்டம் வாழவந்தி அடுத்த ஆண்டிபாளையத்தை சேர்ந்தவர் தங்கவேல் (40). இருச்சக்கர வாகனத்தில் வந்த இவர் லாரியை முந்திச் செல்ல முயன்றபோது எதிர்பாராத விதமாக இருச்சக்கர வாகனம் நிலைதடுமாறி லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தனியார் ஆம்புலன்ஸ், தங்கவேலுவின் உடலை மீட்க சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, பரமத்தி சாலையில் உள்ள மின்தடை பதிவு மையத்தின் மதில் சுவர்மீது மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆம்புலன்ஸ் டிரைவர் பரத் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 


இச்சம்பவம் தொடர்பாக நாமக்கல் போலீசார் உயிரிழந்த தங்கவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.